tamilnadu

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் புகார்

கோவை, மே 22 –கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் நீதி மய்யத்தினர் புதனன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சுதந்திரம் பெற்ற இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே எனஅரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சரத்தின் போது பேசியிருந்தார். இதனையடுத்து தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என கூறியிருந்தார். மேலும் மக்கள் அனைவரும் அவருடைய நாக்கை அறுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கரூரில் பரப்புரையின் போது கமல்ஹாசன் மீது முட்டை மற்றும் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.இதனைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் மக்கள்நீதி மய்யத்தினர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது புகார் அளித்து வருகின்றனர். இதன்ஒருபகுதியாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புதனன்று மக்கள்நீதி மய்யத்தினர் புகார் அளித்தனர். இதில் கரூரில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும், அதிகாரத்தில் இருக்கும் அமைச்சரே பொறுப்பற்ற முறையில், அரசியல் சாசனத்திற்கு எதிராகமற்ற கட்சியின் தலைவர் மீது தாக்குதல்நடத்துவேன் எனக்கூறுவது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். ஆகவே கோவைமாநகர காவல் ஆணையர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனமக்கள் நீதி மய்யத்தினர் அளித்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

;