tamilnadu

img

ஊட்டச்சத்து விழிப்புணர்வு உணவு திருவிழா

தருமபுரி, மார்ச் 17- தருமபுரியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் உணவு திருவிழா செவ்வாயன்று நடைபெற்றது.  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள், தருமபுரி போஷன் அபியான் திட்டத்தின் கீழ் கடந்த 8ஆம் தேதி முதல் வருகின்ற 22ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு போஷன் பக்வாடா ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி 9ஆவது நாளான செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமையில் உணவு திருவிழா நடைபெற்றது.  இதில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் போஷன் பக்வாடா குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது. மேலும் மாவட்ட திட்ட உதவியாளர், வட்டார உதவியாளர்கள் ஆகியோர்களால் கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. ஊட்டச்சத்து தொடர்பான கண்காட்சி, கைகழுவுதல் குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. பாரம்பரிய உணவு சமைக்கப்பட்டு அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஊட்டச்சத்து சம்மந்தமாக விழிப்புணர்வு பாடல்கள், கோலாட்டம் மற்றும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.இராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜி.நாகலட்சுமி, வட்டாட்சியர் சுகுமார், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட திட்ட உதவியாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், வட்டார உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;