பரமத்தி வேலூர் ஏலச்சந்தையில் வெற்றிலையின் விலை உயர்வு
நாமக்கல், மே 22-பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் வெற்றிலை வரத்து குறைந்ததால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலை கர்நாடகம், கேரளம், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறுமாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை முதியம்பயிர் மார் ஆயிரத்து 500 ரூபாய்க்கும் ஏலம் போயின.இந்நிலையில், செவ்வாயன்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்து 500க்கும், கற்பூரி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று 2 ஆயிரத்துக்கும் ஏலம் போயின. வெற்றிலையின் வரத்து குறைவால், வெற்றிலையின் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பம் வரவேற்பு
சேலம், மே 22-அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவுகளுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தருமபுரி அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் கா.ரவி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரசு மற்றும் தனியார்தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்பிரிவுகளில் சேர்க்கைக்கு இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். 14 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14. உச்ச வயதுவரம்பு இல்லை. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கம்பியாள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், புரோகிராமிங் அசிஸ்டண்ட், கட்டிட பட வரைவாளர், மின் பணியாளர், பொருத்துநர், கம்மியர் மோட்டர் வண்டி, கம்மியர்டீசல் என்ஜின், கடைசலர், இயந்திர வேலையாள்மற்றும் பற்றவைப்பவர் ஆகிய தொழிற் பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் www.skiltraining.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் வருகிறமே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வுக்கு வரும்போது விண்ணப்பித்த விண்ணப்பம், சலான் மற்றும் அசல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். இது மாவட்ட அளவில் நடத்தப்படும் கலந்தாய்வுக்கான விண்ணப்பம் ஆகும். அனைத்து மாவட்டங்களிலும் சேர்க்கையானது கலந்தாய்வு மூலம் ஒரே நாளில் நடத்தப்படும். விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பினால் ஒவ்வொருமாவட்டத்துக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.மேலும் விவரங்களுக்கு, முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், தருமபுரி என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04348-235323 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளர்.
நாய்களின் எண்ணிக்கையை குறைக்க தடுப்பூசி
ஈரோடு,மே 22-ஈரோடு மாவட்டத்தில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து அவற்றிற்கு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் வெறிநாய்க்கடி தடுப்பூசி மற்றும்குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.இதுகுறித்து ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யாததால் அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் தெருநாய்கள் வாகனங்களில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களும் துரத்தி கடித்து வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதேபோல் வெறிநாய் கடியும் அதிகமாக உள்ளது. ஆகவே, ஈரோடு மாவட்ட அளவில் 5 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. ஈரோடு மாவட்ட கால்நடை துறை மற்றும் கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், மேலும் சில அமைப்புகள் சார்பாக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. நாய்களுக்கு தடுப்பூசி போடுதல், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைபணிகளில் ஓய்வுபெற்ற கால்நடை துறை பணியாளர்கள், அதிகாரிகள், தன்னார்வலர்கள் பங்கேற்கிறார்கள். வெறிநாய் கடிக்கு தடுப்பூசி ஆண்டுக்கு ஒரு முறை போடவேண்டும். ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்ட நாய்களின் காதுகளில் பஞ்ச் செய்யப்பட்டிருக்கும். அந்த நாய்களை தவிர்த்து மற்ற நாய்களுக்கு முறைப்படி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதன் மூலம் நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.