திருப்பூர், மே 11 -ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவுவதே என் தலையாய குறிக்கோள் என்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியை முடித்துக் கொண்டு வந்த திருப்பூர் எஸ்.பாலச்சந்திரன் கூறினார்.திருப்பூர் 15 வேலம்பாளையம் மாரப்பகவுண்டர் லே அவுட்டைச் சேர்ந்தவர் எஸ்.பாலச்சந்திரன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். அகில இந்திய அளவில் 129 ஆவது ரேங்க் பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐஏஎஸ் பயிற்சிக்குச் சென்றுவிட்டு 10 மாத காலப் பயிற்சியை முடித்துக் கொண்டு தில்லியில் இருந்து சனியன்று திருப்பூருக்குத் திரும்பி வந்தார்.திருப்பூர் 15 வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மாரப்பகவுண்டர் லே அவுட் மற்றும் வேலம்பாளையம் பகுதி பொது மக்கள் சார்பில் எஸ்.பாலச்சந்திரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து சால்வைகள் போர்த்தி பாலச்சந்திரனுக்கு அப்பகுதி பிரமுகர்கள், பெண்கள், இளைஞர்கள், பொது மக்கள் வரவேற்புக் கொடுத்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பாலச்சந்திரன் கூறியதாவது:
நான் அனுப்பர்பாளையம் அரசு துவக்கப் பள்ளி மற்றும் அனுப்பர்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை படித்து முடித்துக் கொண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜியோ இன்பர்மேடிக்ஸ் எனப்படும் புவிசார் தகவல்தொடர்பு குறித்து பட்டப்படிப்பு படித்தேன். வங்கியில் உதவி மேலாளராக 2018 ஜூலை வரை ஐந்தாண்டு காலம் வேலை செய்து வந்தேன். 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ல் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றேன். அதைத் தொடர்ந்து 2018 ஆகஸ்ட் மாதம் ஐஏஎஸ் பயிற்சிக்குச் சென்றுவிட்டு 10 மாத காலப் பயிற்சியை முடித்துக் கொண்டு வந்திருக்கிறேன். எனக்கு தமிழ்நாட்டிலேயே ஐஏஎஸ் பணி கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மே 27 முதல் 50 நாட்கள் பயிற்சி உள்ளது. அது முடிந்து ஜூலை கடைசி அல்லது ஆகஸ்ட் மாதம் தேனி மாவட்டத்தில் வேலைக்குச் சேருவேன். 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனக்குத் தனிப்பொறுப்பாக ஒரு வருவாய் கோட்டத்தில் வேலை தருவார்கள். அதுவரை நான் பயிற்சிப் பணியில் இருப்பேன்.எனது தந்தை சீனிவாசன், தாய் பருவதம், மனைவி அபிநயா. எங்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. எனது தந்தை பிரிண்டிங் தொழில் செய்து வந்தார்.
எனது தங்கை டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு படித்து வருகிறார். எனது மனைவி குரூப் 1ல் வெற்றிபெற்று துணை ஆட்சியராக தேர்வாகி இருக்கிறார். விரைவில் பணி ஆணை கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.என்னால் முடிந்த நல்லதை ஏழை எளிய மக்களுக்குச் செய்ய வேண்டும் என்பதே என் லட்சியம். ஏழை எளிய மக்களின் கல்விக்காக, அவர்களின் மருத்துவத்துக்காக முழு உழைப்பைச் செலுத்துவேன். நான் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அரசுப் பள்ளியில் படித்தால் மாணவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு மேலே வர வேண்டியிருக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எனவே ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு என் முழு கவனத்தைச் செலுத்துவேன். அவர்களும் மேலே வர வேண்டும், இது போல் அரசுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உதவுவேன். ஏனென்றால் அவர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் பகுதி நன்றாக வளர்ச்சி பெறும். அதற்கான முயற்சி செய்வேன்.எனது தலையாய குறிக்கோள் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு பாடுபடுவதே. மற்றபடி அரசுத் தரப்பில் என்னென்ன ஏழை, எளிய மக்களுக்கு திட்டங்கள் இருக்கிறதோ அதை கண்டிப்பாக செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.வரவேற்பு நிகழ்ச்சியில் மாரப்பகவுண்டர் லே அவுட்டைச் சேர்ந்த ஆர்.வெங்கடாசலம், தலைவர் எஸ்.விஸ்வநாதன், செயலாளர் என்.குமரேசன், பொருளாளர் ஆர்.சுப்பிரமணியம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி வேலம்பாளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம், அதிமுகவைச் சேர்ந்த மணி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.ஆர்.ஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.