தருமபுரி, மே 10-தருமபுரியில் 8 வாக்குச் சாவடிகளில் நடைபெற உள்ள மறுவாக்குப் பதிவை, வெப் கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் என்று தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளர்.இதுகுறித்து, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 8 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கெனவே திமுக சார்பில், 361 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டன.இதில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10 வாக்குச் சாவடிகளைத் தவிர, ஏனைய வாக்குச் சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் முறைகேடுகள் தடுக்கப்பட்டன. 10 வாக்குச் சாவடிகளிலும் முறையாக, சுதந்திரமாக வாக்குப் பதிவு நடைபெறவில்லை. மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமரா வேறு திசையில் திருப்பி வைக்கப்பட்டிருந்தது. திமுக முகவர்கள் வாக்குச் சாவடிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். தருமபுரி தேர்தல் அலுவலரும் குறிப்பிட்ட அந்த வாக்குச் சாவடிகளை 6 முறை, சுமார் 4 மணி நேரம் பார்வையிட்டு ஆய்வு செய்ததாகக் கூறியிருந்தார்.எனவே, இதிலிருந்து அங்கு முறைகேடு நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. அதேபோல், நாங்கள் 10 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு கோரியிருந்தோம். ஆனால், தேர்தல் ஆணையம் 8 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த வாக்குப் பதிவு நேர்மையாக, சுதந்திரமாக நடைபெற வேண்டும். இதற்காக, துணை ராணுவத்தை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மேலும், 8 வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா அமைத்து வாக்குப் பதிவைக் கண்காணிக்க வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும். அதேபோல், இந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக, வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நாங்கள் சட்ட நடவடிக்கைக்கு நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.