tamilnadu

அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளை சிசிடிவி பதிவை கொண்டு காவல்துறையினர் விசாரணை

கோவை, மே 28-செல்வபுரம் அருகே அடுத்தடுத்து நான்குவீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுசெய்ததில், குற்றவாளியை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா. இவர் கல்லாமேடு ஹவுசிங் யூனிட் பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் கடந்த 25-ம் தேதி நள்ளிரவு நுழைந்த நபர் ஒருவர் 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார். அதே நாளில் அருகாமையில் உள்ள ஒரு கடை மற்றும் மூன்று வீடுகளில் கொள்ளை நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக செல்வபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹவுசிங் போர்டுகுடியிருப்பு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், சாதிக் பாஷாவின் வீட்டில் கொள்ளையடித்த திருடன் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, அடையாளம் காணப்பட்ட திருடனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.