tamilnadu

கோவை மற்றும் ஈரோடு முக்கிய செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை, மே 7-துடியலூர் பகுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சந்தோஸ்குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர் பன்னிமடை பகுதியில் 6வயதுசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சந்தோஷ்குமார் (34) என்பவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறுமி கொலை செய்யப்பட்ட அன்றே சந்தோஷ்குமாரின் பாட்டியும் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவர் மீது கடுமையான வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கிடையில் காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனால் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமார் ஓராண்டு பிணையில் வெளி வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


கந்துவட்டி தற்கொலை வழக்கில் நிதி நிறுவன ஊழியர் கைது

ஈரோடு, மே 7-கந்து வட்டி பிரச்சனையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நிதி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.ஈரோடு, பழையபாளையம் அருகே சுத்தானந்தன் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (43). இவர் தனது குடும்பத் தேவைக்கு கடன் வாங்கி இருந்தார். நிதி நிறுவனத்தினர் அசலுக்கு மேல் வட்டி கேட்டு மிரட்டிய நிலையில் மனவேதனை அடைந்த ஸ்ரீதர் கடந்த 27ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ஸ்ரீதரை தற்கொலைக்குத் தூண்டிய நிதி நிறுவன உரிமையாளர் திலிப்குமார், ஊழியர்வெங்கடேஷ் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும்என உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ஈரோடு காவல் துறையினர் திலிப்குமார், வெங்கடேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்தனர். இவ்வழக்கில் நிதி நிறுவன ஊழியரானகுமலன்குட்டையைச் சேர்ந்த நடராஜ் மகன் வெங்கடேஷ் (23) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள திலிப்குமாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.


காய்கறி வியாபரியிடம் திருட்டு

கோவை, மே 7–உக்கடம் பேருந்து நிலையத்தில் காய்கறி வியாபாரியிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள குந்தா காலனியை சேர்ந்தவர் காய்கறி வியாபாரி தேவராஜ். இவர் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு காய்கறி ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் திங்களன்று தேவராஜ் பணம் வசூல் செய்வதற்காக கேரள மாநிலத்துக்கு சென்றார். வசூலை முடித்துக்கொண்டு இரவு கோவைக்கு பேருந்தில் திரும்பினார். உக்கடம் பேருந்து நிலையம் வந்ததும் திடீரெனதேவராஜீக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் ஓய்வுஎடுக்க நினைத்த அவர் தான் வசூல் செய்து கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் பணம் அடங்கியகைப்பையை அருகே வைத்து விட்டு கண்ணயர்ந்துள்ளார். இந்நிலையில் தேவராஜ் வைத்திருந்த கைப்பையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். சிறிது நேரம் கழித்து கண் விழித்த தேவராஜ் தனது பணப்பை திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உக்கடம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

;