tamilnadu

திருப்பூரில் சூறைக் காற்றுடன் பலத்த மழை

திருப்பூர், மே 17 -திருப்பூர் மாநகரிலும், சுற்று வட்டாரப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை மாலை சுமார் 1 மணி நேரம் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதி, தாராபுரம் ரோடு, சந்திராபுரம், பழவஞ்சிபாளையம், திருப்பூர் அவிநாசி சாலை,காந்திநகர், வேலம்பாளையம், பிச்சம்பாளையம் மற்றும் காங்கேயம் சாலை விஜயாபுரம், நல்லூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. வழக்கம் போல் பிரதான சாலைகளில் கழிவுநீருடன் மழை நீரும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். விஜயாபுரம் பகுதியில் பலத்த காற்றின் காரணமாக ஒரு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து தூக்கிச் செல்லப்பட்டு அருகாமையில் இருந்த மற்றொரு வீட்டின் மீது விழுந்ததால் அந்த வீட்டின் மேற்கூரையும் பாதிக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு இடங்களில் பலத்த காற்றின் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டன. அதேநேரம், கோடை வெயில் பகல் பொழுதுகளில் வாட்டி வதைக்கும் நிலையில், மாலை நேரத்தில் இந்த மழை பெய்தது திருப்பூர் மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. அதேசமயம் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் இந்த மழைநீரால் நிலத்தடி நீர் மட்டம் உயரவும், சுற்று வட்டார குளம், குட்டைகளில் நீர் நிரம்பவும் வாய்ப்புள்ளது. எனவே நீர்வழிப் பாதைகளில் கழிவுகளை அகற்றி துப்புரவு செய்து வைப்பதுடன், ஆக்கிரமிப்புகளையும் அகற்றி நீராதாரத்தை பாதுகாக்க மாவட்டநிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதுபோன்ற கோடை மழை இன்னும் தொடர்ந்தால் குடிநீர் ஆதாரத்துக்கு பயன்படுவதுடன், சுற்று வட்டார கிராமங்களில் விவசாய பாசனத்துக்கும் பயன் கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.