தருமபுரி, அக். 6- வீடற்றவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குமாறு அரூர் பேரூ ராட்சி 16ஆவது வார்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சி 16ஆவது வார்டில் அம்பேத்கர் நகர் உள்ளது. இப்பகுதியில் பல குடும்பங்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. இவர்கள் பெரும்பாலோர் தினக்கூலிகளாக உள்ளனர். இப்பகுதியை ஒட்டி பட்டு வளர்ச்சித்துறைக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இந்த இடம் 35 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி உள்ளது. எனவே இந்த இடத்தை வீடற்றவர்களுக்கு வழங்குமாறு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் பி.குமார் கூறுகையில், பட்டுவளர்ச்சித்துறைக்கு சொந்தமான இடத்தில் அம்பேத்கர் நகரில் வாழும் வீடற்ற மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி உள்ளோம். தற்போது பட்டுவளர்ச்சித்துறை சொந்தமான இடத்தை வருவாய்த்துறையிடம் ஒப்ப டைத்துவிட்டது. ஆனால் வருவாய்த்துறை இலவச மனைப் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே வீடற்ற மக்களின் நலன் கருதி வருவாய்த்துறை இலவச மனைப்பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.