சென்னை, ஆக. 28 - சென்னையில் உள்ள 61 சதவீதம் பேருக்கு அரசு அறிவித்த நிவாரணம் ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என்று மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்க கோரி வெள்ளியன்று (ஆக.28) மாற்றுத்திறனாளிகள் ஆணையரக அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சென்னை மாவட்டம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள், சென்னையில் 59 ஆயிரத்து 679 பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்களில் 23 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு அறிவித்த 1000 ரூபாய் நிவாரணம் கிடைத்துள்ளது. 61 சதவீதம் பேருக்கு கிடைக்கவில்லை. எனவே, அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மண்டல வளர்ச்சி அலுவலகத்தில் (டிடிஆர்ஓ) மருத்துவச் சான்று வழங்கக்கூடிய மருத்துவர் இல்லாத நிலை உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் அலைகழிக்கப் படுகின்றனர். 4 மாதமாக மூடப்பட்டு கிடக்கும் அந்த அலுவலகத்தில் மருத்துவர் இருப்பதை உறுதி செய்வதோடு, மருத்துவ சான்று உள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பிற மாவட்டங்களில் இருந்து சென்னையில் வந்து தங்கியிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரணத்தை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, ஊரடங்கு காலம் முடியும் வரை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதன்பின்னர் ஆணையரை சந்தித்து மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச்செயலாளர் கே.பி.பாபு, சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆர்.ஜெயச்சந்திரன் (வடசென்னை), எஸ்.மனோன்மணி (மத்தியசென்னை), எம்.சரஸ்வதி (தென்சென்னை) உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.