tamilnadu

குடிநீர் வழங்கல் அதிகாரியின் அலட்சியம் குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி

அவிநாசி, மே 29-அவிநாசி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிபாளையம் பகுதியில் குடிநீர் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அவிநாசி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிபாளையம், பொன்ராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் இன்றி    பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதையடுத்து பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மே 13 ஆம் தேதியன்று குடிநீர் வழங்கக்கோரி தர்ணா போராட்டம் அறிவித்தது. ஆனால் பூண்டி காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இருப்பினும் பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தர்ணா போராட்டத்திற்கு ஆயத்தமானார்கள்.இதையடுத்து பூண்டி காவல் அதிகாரி முனியம்மாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் குடிநீர் வழங்கல் அதிகாரி சேவியரும் கலந்து கொண்டார். அப்போது குடிநீர் வழங்கல் அதிகாரி அலட்சியமாக பதில் அளித்தார். இதில் ஆவேசமடைந்த பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குடிநீர் வழங்குவதை உறுதி செய்யாமல் கலைந்து செல்லமாட்டோம் என தெரிவித்தனர்.இதனையடுத்து பூண்டி காவல் அதிகாரி முனியம்மாள், குடிநீர் வழங்கல் உயர் அதிகாரியுடன் தனது கைபேசி மூலம் பேசினார். இதில் ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்குவதை உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் பொன்ராபுரத்தில் ஒரு நாள் மட்டும்  குடிநீர் விநியோகிக்கப்பட்டது.  பின்னர் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.  வஞ்சிபாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுஉறுப்பினரும், புதுப்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள்தலைவருமான பி.முத்துச்சாமி கூறுகையில், காவல்துறை பேச்சுவார்த்தை நடத்திய பின்பு குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. பொதுமக்கள் குடி நீரின்றி திண்டாடி வரும் வேலையில் குடிநீர் வழங்கல் அதிகாரி அலட்சியமான பதில் அளிக்கிறார்.  இப்பகுதியில்  நாளொன்றுக்கு இரண்டு லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் ஊராட்சி நிர்வாகம் இதுவரை நாளொன்று பத்தாயிரம் லிட்டர் குடிநீர் கூட வழங்கப்படுவதில்லை. எனவே, இப்பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதே நிலை நீடித்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.