tamilnadu

img

தோழர் எஸ்.கே.சேசாசலம் படத்திறப்பு விழா

நாமக்கல், ஜூன் 3-திருச்செங்கோடு அருகே கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்  எஸ்.கே.சேசாசலத்தின் படத்திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டத்தின் மூத்த தோழர் எஸ்.கே.சேசாசலத்தின் படத்திறப்புவிழா ஞாயிறன்று திருச்செங்கோட்டை அடுத்த சூரியம்பாளையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஆதிநாராயணன் தலைமைவகித்தார். திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் ஆர்.வேலாயுதம் வரவேற்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து தோழர் எஸ்.கே.சேசாசலத்தின் உருவபடத்தினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் பேசுகையில், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியானது நாட்டின் விடுதலை பின் 1948 ஆம் ஆண்டு அன்றைய ஆளும் காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர்கள், ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டார்கள். இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் தடையை மீறி கட்சியை வளர்ப்பதற்காக பாடுபட்ட தோழர்கள் காவேரி முதலியார், சேசாசலம், ராமன், ராமசாமி மற்றும் பல தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். குறிப்பாக, காவேரி முதலியார், சேசாசலம் என தந்தையும், மகனும் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

முன்னதாக, கட்சித் தலைவர்களுக்கு கடிதம் கொண்டு போய்சேர்க்கும் வேலையினை சேசாசலம் செய்து கொண்டிருந்தார். தோழர் காவேரியை கைவிலங்கிட்டு சேலத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரோடு சேசாசலம் மற்றும் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 300 கம்யூனிஸ்ட் தோழர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, கம்யூனிஸ்ட் தலைவர்கள் மிக மோசமாக நடத்தப்படுவதை கண்டித்தும், தாங்கள் அரசியல் கைதிகள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் கம்யூனிஸ்ட் தோழர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.  அச்சமயம் சிறையில் இருந்த தனது தந்தையை பார்ப்பதற்கு சேசாசலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன்மூலம் உத்தரவைப் பெற்று தனது தந்தையை சந்தித்தார். இச்சமயத்தில் தான்சேலம் சிறைச்சாலையில் காவல்துறை கொடூரமான முறையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நிகழ்த்தி 22 தோழர்களை சுட்டுக் கொன்றனர். அத்தோழர்களின் உடல்களை கூட உறவினர்களுக்கு கொடுக்காமல் சிறையிலே புதைத்துவிட்டனர். இதில் தோழர் சேசாசலத்தின் தந்தையான தோழர் காவேரியும் ஒருவராவார்.

இதன்பின் சில மாதங்களுக்கு பிறகு 1950 ஆம் ஆண்டு தடை நீக்கப்பட்டு சேசாசலம் உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதன்பின் விடுதலையான தோழர் சேசாசலம்,தந்தை சிறையில் சுட்டுக்கொல்லப்பட்டு இருந்தாலும், இறுதி மூச்சு வரை கம்யூனிஸ்ட் கட்சியில் தான் இருப்பேன், கம்யூனிஸ்ட் கட்சிக்காக தொடர்ந்து செயல்படுவேன், என்னுடைய வாழ்க்கை முழுவதும்கம்யூனிஸ்ட் கட்சி ஊழியனாகவே இருந்து செயல்படுவேன் எனக்கூறி அதன்படி செயலாற்றியவர். மேலும், இவரது மகன்கள், பேரன்கள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கம்யூனிஸ்ட் உணர்வை ஊட்டி அவர்களை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு செயலாற்றி வந்தவர். இவ்வாறு கம்யூனிஸ்டாக வாழ்ந்த ஒரு மகத்தான மனிதர் தோழர் சேசாசலம். 

அத்தகைய தோழரின் நினைவாக படத்திறப்பு நிகழ்ச்சி இன்றுநடைபெறுகிறது. ஆகவே, இன்றைய இளைய தலைமுறையினர் தோழர் சேசாசலம் மனஉறுதியோடு செயல்பட்டதைபோல் நாமும் செயல்பட வேண்டும். நம் எல்லோரையும் உற்சாகப்படுத்தி பேசக்கூடிய அளவுக்குஅவருடைய செயல்பாடு இருந்நதது. தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் செயலாற்றியவர். அவருடைய படிப்பினையைநாம் கற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, பி.பெருமாள், எம்.அசோகன், ந.வேலுசாமி, கே.தங்கமணி, பி.ஜெயமணி, எஸ்.தமிழ்மணி, சு.சுரேஷ், ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.டி.துரைராஜ்மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள்உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்செங்கோடு நகர செயலாளர் ஐ.ராயப்பன் நன்றி கூறினார்.