tamilnadu

கோவை ,திருப்பூர் மற்றும் அவிநாசி முக்கிய செய்திகள்

சேவூரில் ரூ.6.50 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, மே 20 – சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.6.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.அவிநாசியை அடுத்த சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் 319 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.5,930 முதல் ரூ 6,040 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ 5,610 முதல்ரூ. 5,720 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ 5,020 முதல் ரூ 5,300 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ. 6.50 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 5 வியாபாரிகள், 19 விவசாயிகள் பங்கேற்றனர்.


மதுக்கடைகள் விடுமுறை

திருப்பூர், மே 20-திருப்பூர் மாவட்டத்தில்,   நாடாளுமன்றத் தேர்தல்வாக்குப்பதிவு  முடிந்து மே 23 ஆம் தேதியன்று (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள் மற்றும் எப்எல் 2, எப்எல் 3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மூடப்பட்டு மது விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


அரசு மருத்துவமனை அருகே மீட்கப்பட்ட குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

கோவை, மே 20-கோவை அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே மீட்கப்பட்ட குழந்தை தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனை பின்புறம் கடந்த வியாழக்கிழமையன்று பிறந்து 7 நாட்களான ஆண் குழந்தை கேட்பாரற்று கிடந்தது. அப்போது அந்த வழியாக வந்த அரசு கல்லூரி மாணவர்கள் குழந்தையைப் பற்றி அரசு மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், கல்லூரி மாணவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இந்நிலையில், அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி செளந்தரவேல் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிகாரி முன்னிலையில் அந்த குழந்தைக்கு அர்ஜூன் என பெயர் சூட்டி காப்பகத்திற்கு (லைப் லைன்) ஒப்படைத்தனர்.