tamilnadu

img

மருத்துவர் ரமேசுக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி ஆறுதல்

கோயம்புத்தூர், ஜூலை  8- கோவை, கணுவாய் அருகே ஜூன் 24 அன்று  அரசு மதுக்கடையில் மது குடித்து விட்டு வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர்கள் மோதியதில் சமூக ஆர்வலரான மருத்துவர் ரமேஷின் மனைவி ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகள் சாந்தலா படுகாயமடைந்திருந்த நிலையில், மருத்துவர் ரமேஷ், பலரின்  உயிரிழப்பிற்கு காரணமாக இருந்து வரும் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என வலியுறுத்தி மனைவியின் பிரேதத்துடன் நடுரோட்டில் 5 மணி நேரம் போராட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக டாஸ்மாக் கடை எண். 2222 மூடப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு சென்றிருந்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கோவை வந்தார். மருத்துவர் ரமேஷ் இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் சிகிச்சை பெற்று வரும் மகள் சாந்தலா உடல் நலம் குறித்து விசாரித்தார். இதன்பின் பி.ஆர்.நடராஜன் கூறுகையில், ஆனைக்கட்டி சாலையில் உள்ள ஜம்புகண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பல உயிர்களுக்கு ஆபத்து விளைவித்து வருகிறது.  அதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அந்தக் கடையை அகற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.  இதன் நீட்சியாக கடந்த 17.12.2018 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட பரிந்துரை செய்துள்ளார். அப்பரிந்துரையை ஏற்று கடையை மூடாததன் விளைவு, தற்போது மருத்துவர் ரமேஷின் மனைவி உயிரிழப்பிற்கும் காரணமாக அமைந்திருக்கிறது என்றார்.  இந்த சந்திப்பின்போது, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.