tamilnadu

அவிநாசி மற்றும் திருப்பூர் முக்கிய செய்திகள்

 மின் விநியோகம் நிறுத்தம்

அவிநாசி, ஏப்.30-அவிநாசி ஒன்றியத்தில், வியாழனன்று (மே.2) பராமரிப்புக்காக மின் விநியோகம் தடைபடும் என அவிநாசி துணை மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி அவிநாசிலிங்கம் பாளையம், தங்கம் கார்டன், தந்தை பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் வியாழனன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


படைப்பிலக்கியம் பயிற்சிப் பட்டறை

திருப்பூர், ஏப். 30-திருப்பூரில் கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொது வாசகர்களுக்கான கவிதை, சிறுகதை எழுதுதல் பற்றிய கோடை முகாமாக ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நடத்தப்படுகிறது.தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் மே 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இம்முகாம் நடத்தப்படுகிறது. இதில் முன்னணி எழுத்தாளர்கள் பங்கேற்று பயிற்சி அளிக்க உள்ளனர். முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு, தேநீர்வழங்கப்படும், கட்டணம் இல்லை. பங்கேற்க விரும்புவோர் சங்கச் செயலர் பி.ஆர்.நடராஜன் 94434 27156, இரா.சண்முகம் 99448 15107 ஆகியோரை தொடர்புகொண்டு பெயரை பதிவு செய்து கொள்ளலாம். முகாம் நடைபெறும் இடம் விபரம் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் கலை இலக்கியப் பெருமன்றத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெள்ளக்கோவில் விற்பனைக் கூடத்துக்கு விடுமுறை

திருப்பூர், ஏப். 30-வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை தேங்காய் பருப்பும், வியாழக்கிழமை சூரியகாந்தி விதைகளும் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி புதன்கிழமையும், அதற்குஅடுத்த நாள் வியாழக்கிழமையும்ஏல விற்பனை நடைபெறாது.தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்கள் வேலைக்கு வர மாட்டார்கள் என்பதால்,இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளும், வியாபாரிகளும் வழக்கம்போல அடுத்த வாரம் நடைபெறும் ஏல விற்பனையில் பங்கேற்கலாம் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் தெரிவித்துள்ளார்.


வழிபாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை

 திருப்பூர், ஏப். 30 -திருப்பூர் மாவட்டத்தில் அச்சுறுத்தல் உள்ள தேவாலயங்கள், வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு அகில இந்திய கிறிஸ்தவ பொதுநல இயக்கம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் கோரியுள்ளது.திங்களன்று இது குறித்து கிறிஸ்தவ அமைப்பின் மாவட்டத் தலைவர் சாம்சன், செயலாளர் டேவிட் பால் உள்ளிட்டோர் அளித்த மனுவில் இம்மாவட்டத்தில் அச்சுறுத்தல் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.