திருப்பூர், மே 13 –திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகரத்தில் ஆட்டோ நிறுத்துவதில் அங்கிருந்த நண்பர்கள் ஆட்டோ சங்கத்தினருடன் இந்து முன்னணியைச் சேர்ந்தோர் தகராறு செய்த நிலையில் ஆட்டோ நிறுத்தும் இடம் தொடர்பாக காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.வெள்ளகோவிலில் நண்பர்கள் ஆட்டோஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் கடந்த 30 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் அவர்களது ஆட்டோ நிறுத்தத்தில் வலுக்கட்டாயமாக தங்களது ஆட்டோக்களை நிறுத்தி அவர்களுடன் தகராறு செய்தனர். இப்பிரச்சனையில் தீர்வு காண்பதற்கு இருதரப்பையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதென காங்கயம் வட்டாட்சியர் முடிவு செய்தார். அதன்படி காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் விவேகானந்தன் தலைமையில் திங்கள்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வம், வெள்ளகோவில் காவல் ஆய்வாளர் ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சுமார் 60 பேர் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இதில் 30 வருடங்களாக செயல்பட்டு வரும் தங்களது சங்கத்துக்கு தற்போது புதிதாக துவங்கப்பட்டுள்ள மற்றொரு சங்க ஓட்டுநர்கள் சார்பில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், வெள்ளகோவில் நகரத்தில் தங்களது சங்கத்துக்கு 100 மீட்டர் தள்ளி இந்து முன்னணியைச் சேர்ந்தோர் ஆட்டோவை நிறுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இப்பேச்சுவார்த்தையில் எதிர்த்தரப்பைச் சேர்ந்த மூவர் வந்தனர். அவர்கள் 100 மீட்டர் தூரம் தள்ளி ஆட்டோ ஸ்டாண்ட் செயல்பட்டால் தங்களுக்கு இழப்பு அதிகமாகும். எனவே, சரியான இடத்தில் ஆட்டோக்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.இப்பேச்சுவார்த்தைக்குப் பின்பு காங்கயம் வட்டாட்சியர் விவேகானந்தன் கூறியபோது, இரு சங்கங்களும் குறிப்பிட்டுள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்து, அந்த இடத்தில் ஆட்டோக்களை நிறுத்துவதற்கு நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட நிர்வாகங்களிடம் முறையான அனுமதி பெற்றுள்ளார்களா என ஆய்வு செய்து, இரு சங்கத்தினரும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க முயற்சிப்போம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.