tamilnadu

img

ஏலச்சீட்டு நடத்தி 2 கோடி மோசடி

திருப்பூர், ஜூன் 3 –திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி வரை மோசடி செய்த குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.இது பற்றிய விபரம் வருமாறு: திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த மணி என்கிற வஞ்சீஸ்வரி, அவரது கணவர் சிவசாமி, சகோதரி பூங்கொடி ஆகியோர் இணைந்து ஸ்ரீ அஸ்வின் சிட்ஸ் என்ற பெயரில் கடந்த 10 வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வருகின்றனர். எனினும் கடந்த இரண்டு வருடங்களாக ஏலச்சீட்டுக்குப் பணம் கட்டியவர்கள், சீட்டுப் பணத்தைக் கேட்டால் தராமல் இழுத்தடிக்கின்றனர். இந்நிலையில் சிலரிடம் வீட்டை விற்றுப் பணம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர். அத்துடன் வீரபாண்டி மாகாளியம்மன் கோயில் அருகில் வஞ்சி நிலா என்றபெயரில் ரெடிமேட் துணிக் கடை நடத்தி வருகிறார்கள். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்திய பணத்தை மீட்டுத் தர வேண்டும், மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் திங்களன்று கோரிக்கை விடுத்தனர்.