“சீனாவிடம் கேட்க வேண்டிய கேள்வி என ஏளனம்”
வாஷிங்டன், மார்ச் 12- கொரோனா குறித்து கேள்வி யெழுப்பியதால் செய்தியாளர்கள் கூட்டத்தி லிருந்து பாதியிலேயே வெளியேறினார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் திங்களன்று பேட்டி அளித்தார். அப்போது சிபிஎஸ் நியூஸின் வெள்ளை மாளிகையின் நிருபர் வீஜியா ஜியாங், 80,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்துவிட்டபோதும், கொரோனா வைரஸ் பரிசோதனையை உலகளாவிய போட்டியாக ஏன் பார்க்கிறீர்கள் என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த டிரம்ப், ஒருவேளை நீங்கள் சீனாவிடம் கேட்க வேண்டிய கேள்வி இதுவாக இருக்கலாம். என்னிடம் கேட்க வேண்டாம் சரியா என்றார். பல்வேறு நாடுகளில் உயிரிழப்புகள் நிகழ்வதாகவும், இது சீனாவிடம் கேட்க வேண்டிய கேள்வி எனவும் கூறினார். அதைத் தொடர்ந்து, சி.என்.என் இன் வெள்ளை மாளிகை நிருபர் கைட்லான் காலின்ஸை அழைத்துக்கொண்டு டிரம்ப் வெளியேற முயன்றார், ஆனால் ஜியாங்டி, டிரம்ப்பிடம், “ஐயா, நீங்கள் ஏன் என்னிடம் குறிப்பாக இதைச் சொல்கிறீர்கள்?” எனக் கேட்டார்.
‘‘நான் உங்களுக்குச் சொல்கிறேன்” இதை குறிப்பாக யாரிடமும் சொல்லவில்லை. இது போன்ற ஒரு மோசமான கேள்வியைக் கேட்பதால் இதைச் சொல்கிறேன். என்றார். இதற்கு பதிலளித்த ஜியாங், நான் கேட்டது “மோசமான கேள்வியல்ல” இது முக்கியமான கேள்வி என்றார். பின்னர் மற்றொரு வெள்ளை மாளிகை நிருபரின் கேள்வியை எதிர்கொள்ளவும் டிரம்ப் மறுத்துவிட்டார்.
சிஎன்என் வெள்ளை மாளிகை நிருபர் காலின்ஸ் என்னிடம் இரண்டு கேள்விகள் உள்ளன எனக் கூறினார். பரவாயில்லை என்று கூறி டிரம்ப் சமாளித்தார். அவரைத் தொடர்ந்து பெண் செய்தியாளர் ஜியாங்கும் மற்ற செய்தியாளர்களும் விடாமல் கேள்விகளை அடுக்கியதால், செய்தியாளர் சந்திப்பில் இருந்து ஜனாதிபதி டிரம்ப் பாதியிலேயே கிளம்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. டிரம்ப் செய்தியாளர் சந்திப்பிலிருந்து வெளியேறியதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். டிரம்ப் முடிவு சரியானதல்ல என சிஎன்என் செய்தியாளர் பிளிட்சர் கூறினார்.
சிபிஎஸ் நியூஸ் செய்தியாளர் ஜியாங்கைப் பற்றிய டிரம்ப்பின் கருத்து இனவெறி கொண்டது. வெள்ளை மாளிகையில் இனவெறி கருத்துக்களை ஜியாங் எதிர்கொள்வது இதுவே முதல் முறை அல்ல என்று சில செய்தியாளர்கள் கூறினர். இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், இந்த வார இறுதிக்குள் அமெரிக்காவில் 10 மில்லியன் கொரோனா சோதனைகள் நடைபெறும். திங்கள்கிழமை காலை நிலவரப்படி, 90 லட்சம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நாளொன்று க்கு மூன்று லட்சம் பேர் பரிசோதிக்கப் படுகின்றனர். தென் கொரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், சுவீடன், பின்லாந்து மற்றும் வேறு எந்த நாடு களையும் விட அதிகளவிலான மருத்துவ பரிசோதனைகளை நடத்தி வருகிறோம் என்றார்.