மர்மங்கள்
சிறையில் விசாரணைக் கைதி தற்கொலை, லாக்கப்பில் கைதி தற்கொலை என சொல்லப்படும் இந்த மர்ம கொலைகள் அனைத்தும் சந்தேக கொலைகளாகவே இருக்கின்றன. தமிழகத்தின் புழல் சிறை என்றாலும் அமெரிக்காவின் நியூயார்க் சிறை என்றாலும் ஒரே மாதிரியாகதான் உள்ளன. இதில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. நியூயார்க் சிறை, உலகிலேயே சிறந்த பாதுகாப்பான சிறை என்று பெருமை பேசப்படுகிறது. ஆனால் அந்த சிறையில் ஒரு பாலியல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது திடீரென்று கைதி தூக்கில் தொங்கினார். இதற்குப் எவருமே பொறுப்பேற்காமல் நழுவி கொண்டார்கள். ஜெப்ரிஎப்ஸ்டெய்ன் (66) மான்ஹாட்ட னில் பெரும் தொழிலதிபர். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனாலும், ஒவ்வொரு நாளும் இவர் பாலியல் தொடர்பிலே இருப்பவர். இவருக்கு 2 பங்களாக்கள் உள்ளன. இரண்டிலும் அவர் பல அரசியல் தலைவர்களுக்கு அடிக்கடி விருந்து கொடுப்பார். வாய்க்கு ருசியாக விருந்தில் எல்லாம் கிடைக்கும், பாலியல் குற்றங்களும் சர்வசாதாரணமாக அங்கே நடக்கும். அதற்காகவே பெரும்புள்ளிகள் இவரை நோக்கி வருவார்கள். இவர் சிறுமிகளை வளைத்துக் கொண்டு வந்து முக்கிய விருந்தினர் பெரும்புள்ளி களுடன் நெருக்கமாக பழக விடுவார். நம்ம ஊரில் வழக்கில் சிக்கியுள்ள ஒரு பேராசி ரியைபோல இவருடைய முன்னாள் சினேகிதி கெய்ஸ்லைன் மேக்ஸ்வெல் என்பவர் 16 வயது நிரம்பிய சிறுமிகளை அழைத்து வருவார். அவர்களுக்கு நிறைய பணமும் கிடைக்கும். கல்வி உதவித்தொகையும் கிடைக்கும். தன்னுடன் படிக்கும் பிற சிறுமி களை அழைத்து வந்தால் ஊக்கத் தொகை யும் உண்டு என்பதுபோன்ற நடைமுறை தொடர்ந்துள்ளது.
2002-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இவரது பங்களாவுக்கு வந்து விருந்தாகிப்போன இளம் பெண்களில் ஒருவரான ஜெனிபர் ஆரோஸ் இப்போது வழக்கு தொடுத்துள்ளார் சில ஆதாரங்களு டன். அதனால் எப்ஸ்டெய்ன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டி ருந்தார். எப்ஸ்டெய்ன் ஏற்கனவே 2006-ல் கைது செய்யப்பட்டு, சிறுமிகளை விபசாரத்துக்கு ஊக்கப்படுத்தியதாக குறுகிய கால தண்டனைப் பெற்றவர்தான். ஆனால் இப்போது, பெண்களை கடத்தியது, சிறுமி களை பாலியல் பலாத்காரம் செய்தது ஆகிய குற்றங்களில் வசமாக சிக்கியுள்ளார். ஆதாரங்களும் வலுவாக உள்ளன. இந்நிலையில் இவர் டிரம்புடன் இருக்கும் படமும், டிரம்ப் இவரைப் பற்றி பெருமை யாக என்னைப்போலவே இவருக்கும் இளம் பெண்களைப் பிடிக்கும் என்று பேட்டி அளித்த காட்சித் தொகுப்பும், இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூஸ் இவரது விருந்தில் ஒரு 16 வயது இளம் பெண்ணுடன் நெருக்க மாக நிற்கும் படமும் சமீபத்தில் வெளியானது. இதற்காக அதிபர் டிரம்ப் கொஞ்சமும் அசரவில்லை. 12 ஆண்டுக்கு முன் நட்பாக இருந்தேன். அப்போதே அந்த நட்பு முறிந்து விட்டதே என்று கழன்று கொண்டார். பக்கிங்ஹாம் அரண்மனை இளவரசர் ஆண்ட்ரூஸ் விசாரணைக்கு கடுமையாக மறுப்பு தெரிவித்தது. இதுபோதாதென்று, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பெயரும் விருந்தினர் பட்டியலில் சேர்ந்தது. இந்நிலையில் அடுத்த நாளே ஜெப்ரி எப்ஸ் டெய்ன் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
எப்ஸ்டெய்ன் ஏற்கெனவே தற்கொலை செய்து கொள்ள முயன்று மயங்கிய நிலை யில் கிடந்ததாக சொல்லப்பட்டது. அப்படி யான மனநிலையில் இருந்தவருக்கு ஏன் கண்காணிப்பை அதிகரிக்கவில்லை என்று கேட்டால் இப்போது சொல்கிறார்கள். முத லில் அவர் கழுத்தில் காயம் ஏற்பட்டதற்கு காரணம், அவருடன் சிறையில் இருந்த முன்னாள் காவல் அதிகாரி நிக்கோலஸ் என்பவர் ஜெப்ரியின் கழுத்தை நெரித்ததால் காயம் ஏற்பட்டது என்கிறார்கள். அந்த கைதியை வேறு அறைக்கு மாற்றிவிட்டோம். இவர் தனியாகத்தான் இருந்தார் என்று எப்ஸ்டெய்னின் வழக்கறிஞரே சொல்கிறார். சரி ஏன் அவரை சிறையில் கண்காணிக்கவில்லை என்று கேட்டால் இப்போது சிறையின் லாக்புக்கை காட்டி புது கதை சொல்கிறார்கள். கைதிகள் அனைவரும் இருக்கிறார்களா என்று சோதிக்க அரை மணிநேரம் ரோந்து சென்ற நேரத்தில் இந்த தற்கொலை நடந்துவிட்டதாக சொல்கிறார்கள். எப்ஸ்டெய்ன் தற்கொலையில் இன்னும் ஆயிரம் சந்தேகங்கள் வந்தாலும் எல்லாவற்றுக்கும் பதில் தயாராக இருக்கும். இதுதான் உலகம் முழுவதுமுள்ள சிறைகளில் நடக்கும் மர்மகொலைகளின் தொடர் கதை.
இந்த வழக்கில் சிக்கிய அனைவரும் பெரும்புள்ளிகள். 15 ஆண்டு கழித்து கிளம்பிய பூதம் எல்லாரையும் சந்திக்கு இழுத்து நிறுத்திவிடும் என்ற அச்சம் எழுந்தபோதுதான் இந்த தற்கொலை நடந்ததுள்ளது. இந்த பெண்மணி இத்தனை ஆண்டுகள் கழித்து அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் வழக்கு தொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்றால் அதற்கும் ஒரு அரசியல் பின்னணி இருக்கிறது. ஜெப்ரி எப்ஸ்டெய்ன் மரண தண்டனை பெறக்கூடிய அளவுக்கு குற்றவாளிதான். அதற்காக தண்டனைக்கு முன்பே தற்கொலை என்பதை எப்படி நம்பமுடியும்? இந்த சம்பவம் விரைவில் மறக்கப்படும். யாரும் பலிகடாவுக்கு அழுது கொண்டிருப்பதில்லை. காரணம் அடுத்தடுத்து முன்னுக்கு வரும் புதிய அரசியல் பிரச்சனைகள் இவைகளை பின்னுக்குதள்ளிவிடும். இதுதான் நாட்டின் நடப்பாகவும் உலக முழுவதும் உள்ள சிறைகளில் நடைபெறும் தொடர்கதையாகவும் உள்ளன. இது எப்போது மாறும் எப்படி மாற்றப்போகிறோம் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.
டிரம்புடன் ஜெப்ரிஎப்ஸ்டெய்ன் (கோப்புப்படம்)