டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை
ஜெனீவா, ஜூன் 9- கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் மோசமான நிலையை சந்தித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளிலிருந்து அதிக தொற்று எண்ணிக்கை பதிவாகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,03,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆசியாவிற்குப் பிறகு, ஐரோப்பா இந்த நோயின் மையமாக மாறியது, ஆனால் இப்போது அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது. இது குறித்து உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:
உலகளவில் கடந்த பத்து நாட்களில் ஒன்பது நாட்கள் தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. ஞாயிறன்று இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,36,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது. அதில் கிட்டத்தட்ட 75 சதவீத பாதிப்பு அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகள் உட்பட பத்து நாடுகளிலிருந்து வந்துள்ளவையாகும். ஐரோப்பாவில் நிலைமை மேம்பட்டு வந்தாலும் உலகளவில் மோசமடைந்து வருகிறது. நிலைமை மேம்பட்டு வரும் நாடுகளில் கொரோனாவை வென்றுவிட்டோம் என்ற மனநிறைவு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.