tamilnadu

img

பழங்குடியினரின் குடிலில் நடந்த அமேசான் நாடுகளின் ஆலோசனை கூட்டம்

பொலிவியாவில் உள்ள பாரம்பரிய பழங்குடியினரின் குடில் ஒன்றில் காடுகளின் பாதுகாப்பு குறித்து அமேசான் நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள நிலையில்,  கொலம்பியாவில் நேற்று அமேசான் நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொலம்பியா, பொலிவியா, ஈக்வடார், கயானா, பெரு, சரினாம் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர். பிரேசில் அதிபர் ஜெயர் போல்சனரோ வீடியோ கான்பெரன்ஸ் மூலம் கூட்டத்தில் பங்கேற்றார். மேலும், டிகுனா பழங்குடியினப் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர். அவர்களது பாரம்பரியக் குடிலில் தரையில் இலையின் மீது பழங்களை வைத்து, சுற்றி அமர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில், காடுகளின் பாதுகாப்பு குறித்தும், கனிமவளத் திருட்டு போன்ற காரணங்களுக்காக காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பது மற்றும் காடுகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை தடுப்பது குறித்தும் பேசப்பட்டது. உறுப்பு நாடுகளுக்குள் தகவல் பரிமாற்றம், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தட்பவெப்பநிலையை பகிர்ந்து கொள்ளுவது, அமேசான் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வது என பல அம்சங்கள் குறித்து உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. மேலும் தீயை அணைக்கும் பணியில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அந்நாடுகளுக்குள் உடன்படிக்கை எட்டப்பட்டது.

இந்த கூட்டத்தில், வீடியோ கான்பெரன்ஸ் மூலம் பேசிய பிரேசில் அதிபர் ஜெயர் போல்சனரொ, ”காடுகளை காக்கும் நமது இறையாண்மையை பிற நாடுகளுக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அமேசான் காடுகளின் பாதுகாப்பை வைத்து சர்வதேச பிரச்சனையாக்க அழைப்பு விடுத்தால், உறுப்பு நாடுகள் அதை நிராகரிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.