tamilnadu

img

துர்நாற்றம் வீசும் சோலார் காலத்தோடு ஒப்பிடும் முயற்சி பலிக்காது: முதல்வர்

திருவனந்தபுரம், ஜுலை 8- தங்க கடத்தலுடன் முதல்வர் அலுவலகத்தை தொடர்பு படுத்தவும், துர்நாற்றம் வீசும் சோலார் காலத்தோடு ஒப்பிடவும் முயற்சி நடக்கிறது. இதைவிட மோசமான முறையில் சமூகத்தின் முன்பு சித்தரிக்கும் முயற்சிகளை இதற்கு முன்பும் பார்த்துள்ளோம். நாக்கில் வலுவிருக்கிறது என எதை வேண்டுமானாலும் பேசிவிடக்கூடாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.    இதுகுறித்து செவ்வாயன்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:  முதல்வர் அலுவலகத்திலிருந்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று சுங்கத்துறையே கூறிவிட்டது. எல்.டி.எப் அரசு இங்கு அதிக மதிப்பைக்  கொண்டுள்ளது. ஐடி செயலாளர் சிவசங்கரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் மாற்றப்பட்டார். இந்த பெண்ணோடு (சொப்னா) தொடர்பு படுத்தி குற்றச்சாட்டுகள் இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. யுடிஎப்-க்கு  இப்படி ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ளவே முடியாது. கரும்புகை கிளப்பி அரசை சோர்வடையச் செய்து விடலாம் என்பதுதான் நோக்கம் என்றால் அது  நடக்காது. உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடிக்கட்டும்.

 விவாதத்துக்குள்ளாகி இருக்கும் பெண்ணை ஏர் இந்தியா மற்றும் துணைத் தூதரகத்திற்கு யார் பரிந்துரைத்தார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். போலி காட்சிகளை ஒளிபரப்பிய ஜெய்ஹிந்த் சேனலுக்கு எதிராகவும் முதல்வர் பதிலளித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்தின் கீழ் பல  நிகழ்வுகள் நடப்பதுண்டு. அதில் அவர் பங்கேற்றும்  உள்ளார். அந்த சேனலுக்கு எதிராக சட்ட நட வடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆனால் அந்த  காட்சியை முன்வைத்து பிரச்சாரம் நடத்திய பாஜக தலைவரையும் எதிர்க்கட்சி தலைவரையும் என்ன செய்ய வேண்டும்? பழைய நினைவுகள் பலவும் வந்திருக்கலாம். இப்போது உள்ளவர்களைப் பார்த்து அதற்கு முயற்சிக்க வேண்டாம். சிலர் இதை  சோலாருடன் ஒப்பிட முயற்சிக்கின்றனர். துர்நாற்றம் வீசும் சேற்றில் மூழ்கிக் கிடப்போருக்கு, மற்றவர் களும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கலாம். தற்போது அதை அவர்களால் சாதிக்க முடியாது.

காரணம் நாங்கள் அப்படிப்பட்ட களம் கண்டு வந்தவர்களல்ல. இந்த வழக்குடன் தொடர்புள்ள எந்த விசாரணை என்றாலும் மாநில அரசுக்கு முழுமையான உடன்பாடு உள்ளது.  அந்த பெண்மணி தொடர்பான ஒரு வழக்கில் கேரள குற்றப்பிரிவு காவல்துறை வாக்கு மூலம் அளித்துள்ளது. அந்த வழக்கில் அவரை  குற்றவாளியாக சேர்க்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. அப்படியிருக்க அரசுக்கு ஏதேனும் தனிப்பட்ட விருப்பம் உள்ளதாக கூற முடியுமா? பாரபட்சமற்ற அறிக்கைதான் அளிக்கப்பட்டது. வழக்கு (தங்க கடத்தல்) தொடர்பாக முதல்வரின் அலுவலகத்தில் இருந்து யாரும் அழைக்கவில்லை என்று கூறியது சுங்கத்துறைதான். அதோடு இதுதொடர்பான அனைத்து கட்டுக்கதைகளும் தகர்ந்ததல்லவா? பொய்க் கதைகளுக்கு சிறிய ஆயுளே உண்டு. அதுதான் இந்த சம்பவத்தில் நடந்துள்ளது.  தேர்தலுக்கான மாதங்கள் நெருங்கி வருகின்றன. ஏதேனும் கரும்புகை பரப்பி அரசின் உறுதியை குலைத்துவிடலாம் என்று கருதினால் அது நடக்காது என்று முதல்வர் கூறினார்.