tamilnadu

img

யுடிஎப் போராட்டங்கள் கோவிட்டின் பிடியில் கேரளத்தை தள்ளிவிடுவதற்கு: வி.எஸ்.அச்சுதானந்தன்

திருவனந்தபுரம், ஜூலை 11- கோவிட் காலத்தில் அதிக ஆட்களை திரட்டி நடத்தும் காங்கிரஸ் மற்றும் யுடிஎப் கட்சிகளின் போராட்டம் மரண வியாபாரம் செய்யும் முயற்சி என வி.எஸ்.அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முகநூலில் அவர் கூறியிருப்பதாவது: ஜனநாயத்தில் போராடுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. குறிப்பாக அரசின் முடிவுகளுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் அரசின் பிரதிநிதிகளுக்கு எதிராகவும். ஆனால், இப்போது நிலவுவது வேறுபட்ட சூழ்நிலையாகும். கோவிட் என்கிற கொள்ளைநோய் சமூகத்தை நாசப்படுத்த கண்ணுக்கு தெரியாமலே உள்ளது. இத்தனை நாட்கள் கேரளம் தாக்குப்பிடித்தது அரசு நடத்திய வலுவான நடவடிக்கைகளால்தான். சுமார் ஐந்தரை லட்சம் பேர் அன்னிய நாடுகளில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் வந்தாலும் கேரளத்தில் நோயாளிகளும், மரணங்களும் மிகவும் குறைவாக இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து வந்த படகுகள் மூலமோ இங்கிருந்து அங்கு சென்ற படகுகள் மூலமோ பூந்துறை பகுதியில் சூப்பர் பரவல் ஏற்பட்டதைத் தவிர கேரளத்தின் நிலை மிகவும் சிறப்பாக இருந்தது.  

இந்த நல்ல சூழ்நிலையில் மிகவும் அதிகமாக வருத்தப்படச் செய்வது இங்குள்ள ஒருபகுதி காங்கிரஸ், லீக், பாஜக தலைமைகளில் உள்ள எதிர்கட்சிகளாகும். கண்மூடித்தனமான அரசியல் பகையின் மூலம் அவர்களுக்கு மக்களுடன் எந்த ஒரு அர்ப்பணிப்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். எந்த சட்டங்களையும் பின்பற்றாமல் அவர்கள் நடத்தும் போராட்டங்கள் கேரளத்தை கோவிட்டின் பிடியில் தள்ளிவிட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டவையே. கேரளத்தில் கோவிட் நோயாளிகளும் மரணங்களும் அதிகரித்து, அதை வைத்து மாநில அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கவே அவர்கள் முயற்சிக்கின்றனர். போராடுவதற்கான உரிமையை தவறாக பயன்படுத்தி மக்களது வாழ்க்கையையும் உயிரையும் ஆபத்துக்கு உள்ளாக்கும் முயற்சியில் இருந்து எதிர்கட்சிகள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு மக்களோடு உள்ள கடமையை நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.