திருவனந்தபுரம்:
அகால மரணங்கள் ஏற்படாமல் உயிர்வாழ்தலுக்கு முன்னுரிமை அளித்து கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் அனைவரும் ஒத்துழைக்குமாறு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
ஞாயிறன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சைலஜா மேலும் கூறியதாவது: கேரளத்தில் 80 சதவிகிதம் கோவிட் உயிரிழப்பு இதர நோய்களால் ஏற்பட்டுள்ளது. இதில் 72 சதவிகிதம் 60 வயதுக்கு மேற்பட்டோர். ஆனால் 20 முதல்40 வரையுள்ளவர்களுக்கு அதிக அளவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. நோய் எதிர்ப்புசக்தி இந்த வயதினரிடம் உள்ளதால் உயிரிழப்பு குறைவு. ஆனாலும் மரணமடைந்ததில் 28 சதவிகிதம் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூலம் வீட்டிலுள்ள முதியோருக்கு நோய் பரவல் ஏற்பட்டு உயிரிழப்பைஅதிகரிக்கிறது. அண்மையில் கட்டுப்பாடு களை கைவிட்டு நடந்த போராட்டங்களில் பங்கேற்றவர் வீட்டில் பெற்றோரை கோவிட்டுக்கு பலிகொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
இனி வரும் நாட்கள் மிகவும் ஆபத் தானவை. நமது சுகாதார ஏற்பாடுகளை மீறி நோய் பரவல் ஏற்பட்டால் தம்மால் தாங்கமுடியாததாகிவிடும். தயவு செய்து சுகாதாரத்துறை ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளை பின்பற்றி அகால மரணங்கள் ஏற்படாமல் உயிர்வாழ்தலுக்கு முன்னுரிமை அளித்திடுங்கள் என்று உருக்கமாக கேட்டுக்கொண்டார். ஓணத்தின்போது அளித்த தளர்வுகளால் ஆகஸ்டில் நோய் பரவல் அதிகரிக்க காரணமானது. தற்போது பெருந்திரள் போராட்டங்கள் கோவிட் கட்டுப்பாடுகள மீறி நடப்பதைத் தொடர்ந்து நோய் மேலும் அதிகரித்து வருகிறது. திருமணங்கள், கோயில்களில் 50 பேருக்கு மேல் கூட்டம் சேராமலும், 2 மீட்டர் இடைவெளி யை பின்பற்றியும் நோய் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இரண்டாம் அலை பரவல்
கேரளம் அறிவியல்பூர்வமாக செயல்பட்டது கோவிட் பரவலை கட்டுப்படுத்த உதவியது. தற்போது இரண்டாம் அலை பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் இஸ்ரேல், இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் போன்றசில நாடுகள் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி முழு ஊரடங்கை மீண்டும் பிறப்பித்துள்ளன. நமது நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி சென்றால் மிகவும் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். கேரளத்தில் சனியன்று 7006 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. 656 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர். கேரளத்தில் கோவிட் கண்டறியப்பட்ட 37 நாட்களுக்கு பிறகு நோய்பரவல் தொடங்கிய தமிழ்நாட்டிலும் 45 நாட்களுக்கு பிறகு தொடங்கிய கர்நாட கத்திலும் மரணம் பத்தாயிரத்தை கடந்துள்ளது. கேரளத்தில் மரண விகிதம் 0.39 சதவிகிதம். தமிழ்நாட்டில் 1.6 சதவிகிதம். இந்தியாவின் மரண சதவிகிதம் 3 ஆகவும் உள்ளது. நாட்டிலேயே முதியோர் அதிகம் உள்ள மாநிலம் கேரளமாகும் (15 சதவிகிதம்), மக்கள் அடர்த்தி 860. இந்தியாவின் மக்கள் அடர்த்தி இதில் பாதி அளவாக (460) உள்ளதையும் இணைத்து கேரளத்தின் சுகாதார நடவடிக்கைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். கடந்த4 ஆண்டுகளில் சுகாதாரத்துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் கோவிட்டை எதிர்கொள்ள நமக்கு உதவி வருகிறது. 29 கோவிட்சிறப்பு மருத்துவமனைகள், 31 அரசு மருத்துவக்கல்லூரிகள் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 133 தனியார் மருத்துவமனைகள், 222 கோவிட் முதல்நிலை சிகிச்சை மையங்களில் 50,257 படுக்கை வசதிகள் உள்ளன. இவற்றில் கணிசமானவை தற்போது காலியாகவே உள்ளன.மேலும் வசதிகளை தொடர்ந்து அதிகப்படுத்தமாவட்ட ஆட்சியர்களும், சுகாதாரத்துறை யினரும் நடவடிக்கை மேற்கொண்டு வரு கின்றன.
ஐநா சபையின் அங்கீகாரம்
வாழ்வியல் நோய்களால் அவதிப்படுவோருக்கு கேரளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வீடுகளுக்கே சென்று சுகாதாரத்துறையினர் மருந்துகளை ஒப்படைக்கும் நடைமுறை உள்ளது. இந்த கோவிட் காலத்தில் அதுபெரிய அளவுக்கு அவர்களுக்கு உதவியது. இத்தகைய முன்னுதாரணமான செயல்பாடுகளை பலரும் பார்க்கவே செய்கிறார்கள் என்பதுதான் ஐநா சபை உலகெங்கும் உள்ள 6 நாடுகளுடன் இந்த சின்னஞ்சிறு கேரளத்தைசிறப்பித்திருப்பதன் மூலம் அறிய முடிகிறது. எதிர்மறையான விமர்சனங்களும் இருக்கலாம் என்றார்.