திருவனந்தபுரம், ஏப். 1- மேலும் ஐந்து மாதங்களுக்கான சமூகநல ஓய்வூதியம் விநியோகம் செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.2,833 ஒதுக்கீடு செய்துள்ள தாகவும் கேரள நிதி அமைச்சர் டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இப்போது அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான ஓய்வூதியம் வீடுகளில் நேரடியாகவோ, அல்லது வங்கி கணக்குகளிலோ செலுத்தப்பட்டுள்ளது. இனி டிசம்பர் முதல் ஏப்ரல் வரையான 5 மாத ஓய்வூதியம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க இரண்டு விசயங்கள் உள்ளன. ஒன்று ஏப்ரல் மாதத்துக்கான தொகை முன்பணமாகவே வழங்கப்படுவது. மற்றொன்று புதிய நிதி ஆண்டுக்கான உயர்வு நூறு ரூபாய் சேர்த்து ஏப்ரல் மாத ஓய்வூதியம் ரூ.1300 ஆகும்.
ஐந்து மாத ஓய்வூதியத்திற்காக ரூ.2730 கோடி அனுமதிக்கப்படுகிறது. அதோடு நிலுவைகளை வழங்க ரூ.34 கோடி தனியாக அனுமதிக்கப்படுகிறது. 2019 டிசம்பர் 15 க்குள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஓய்வூதியம் அனுமதிக்கப்பட்டது. ஆனால் இப்போது 2020 பிப்ரவரி 15 வரை பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு நிலுவையுடன் வழங்கப்பட உள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான ஓய்வூதியம் வழங்கியபோது பட்டியலில் இடம்பெற்றவர்கள் திருமணம், மறுமணம் செய்யவில்லை என்கிற சான்று வழங்காதோருக்கு ஓய்வூதிய நிலுவையை வழங்க ரூ.68 கோடி தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஜுன் மாதத்துக்குள் சான்றுகளை ஒப்படைக்க வேண்டும். இதோடு மொத்தம் ரூ.2,833 கோடி சமூக ஓய்வூதியத்துக்காக அனுமதிக்கப்படுகிறது. விவசாயத்தொழிலாளர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவை, மணமாகதோர் என ஐந்து வகையான திட்டங்களில் 44 லட்சம் பயனாளிகளுக்கு இந்த தொகை கிடைக்கும்.
இதுவல்லாமல், ரூ.162 கோடிக்கான விவசாயிகள் உள்ளிட்ட 16 நல வாரியங்களில் உள்ள சுமார் 6 லட்சம் உறுப்பினர்களுக்கு அரசிடமிருந்து ரூ.369 கோடி அனுமதிக்கப்படுகிறது. சுமை தூக்கும் தொழிலாளர்கள், மோட்டார் வாகனம், கட்டட கட்டுமானம், கள்ளிறக்குவோர் போன்ற சுயேச்சையான நலநிதிகளிலிருந்து 4 லட்சம் பேருக்கு ரூ.240 கோடியும் விநியோகம் செய்யப்படும். கடந்த இரண்டு மாத ஓய்வூதியங்களையும் சேர்த்து மொத்தம் ரூ.4,706 கோடி 54 லட்சம் பேருக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இது கொரோனா காலத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய வருவாய் பரிமாற்றத் திட்டம் என்பதில் ஐயமில்லை. மத்திய அரசு செய்ய வேண்டியதும் இதுதான். இந்தியாவில் உலகளாவிய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்துங்கள். ஓய்வூதியத் தொகையை ரூ .200-300 லிருந்து ரூ .1000 ஆக உயர்த்த வேண்டும் என்று தாமஸ் ஐசக் கூறினார்.