சீனாவில் இருந்து கேரளா திரும்பிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் முழுமையாக குணமடைந்ததாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் கேரள சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஹுபேய் மாகாணம் உகான் நகரில் முதல் முதலாக பரவத்தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் இதுவரை, கரோனா வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,011 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் சீனாவில் இருந்து 29 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 3 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ஒரு மாணவி ஒருவரின் ரத்த மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் வைரஸ் பாதிப்பில் இருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று கேரள சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.