tamilnadu

img

கேரள மழை - நிலச்சரிவில் 79 பேர் பலி நிவாரண முகாம்களில் 2,87,500 பேர்

திருவனந்தபுரம்:
கேரளத்தில் பெய்த கனமழை- நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. 61 பேரை காணவில்லை. நிவாரண முகாம்களில் 2,87,500 பேர் தங்கியுள்ளனர். துயரத்தில் சிக்கியிருப்போரை மீட்கவும் நிவாரணம் அளிக்கவும் அரசு மற்றும் தன்னார்வலர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர். 

மாநிலம் முழுவதும் 1639 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. மலப்புறம் மாவட்டத்தில் மிக அதிகமாக 56,203 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர். வயநாட்டில் 37,059 பேரும் கண்ணூரில் 19,924 பேரும்  திரிச்சூரில் 42,176 பேரும் முகாம்களில் உள்ளனர். நிவாரண முகாம்களில் உள்ளோருக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர்களுக்கு அதற்கான முழு பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கி 64 பேர் காணாமல் போன மலப்புறம் மலைப்பகுதியான கவளப்பாறையில் ஞாயிறன்று மீட்கப்பட்ட 4 சடலங்களுடன் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 51 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. வயநாடு மேப்பாடி புத்துமலையில் மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டது. இங்கு பலி எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. மழை இல்லாததால் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மலப்புறம் மாவட்டத்தில் மட்டும் தேசிய பேரிடர் மீட்பு படையின் 3 அணிகளும்  ராணுவத்தின் மதராஸ் ரெஜிமண்ட் அணி ஒன்றும்  கடலோர காவல் படையினரும் களத்தில் உள்ளனர். பொறியியல் துறையினரும் உள்ளனர்.  வீடுகளை புதைத்து வைத்துள்ள 12 அடி சேற்றை அகற்றும் பணி மிகுந்த சிரமத்துக்கு இடையே நடக்கிறது. மனிதாபிமானத்துடன் அனைத்துவித முயற்சிகளையும் மீட்பு படையினர் மேற்கொண்டுள்ளனர்.  மலப்புறம், வயநாடு மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கைகளில் விமானப்படையின் வீரர்களுடன் இரண்டு ஹெலிகாப்டர்கள் களத்தில் உள்ளன. துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளோரை நெருங்கி உணவுப் பொருட்களும் மருத்துவ உதவியும் வழங்க முடிந்துள்ளது. வெள்ளம் வடிந்த இடங்களுக்கு சிலர் முகாம்களிலிருந்து வீடு திரும்பி வருகின்றனர்.