tamilnadu

கேரளம் கைகோர்த்து துயரத்தை கடக்கும்

வயநாடு, ஆக.13-     துயரத்தை கேரளம் ஒற்றுமையாய் எதிர்கொள்ளும் என தெரிவித்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேரளத்தில் கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.  வயநாடு மேப்பாடி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாமில் உள்ள மக்களை பினராயி விஜயன் செவ்வாயன்று நேரில் சந்தித்தார். அவர்களிடையே அவர் பேசியதாவது:  முகாமில் தங்கியிருப்போரில் வீட்டை முழுமையாக இழந்தவர்கள் உள்ளனர். உற்றார் உறவினர்களை இழந்தவர்கள் உள்ளனர். வீடுகளில் மோசமான சேதத்தை எதிர்கொண்டவர்கள் உள்ளனர். அனைவரும் ஒன்றுபட்டு நமக்கு ஏற்பட்டுள்ள துயரங்களையும் சிரமங்களையும் கடந்து வரலாம். அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது மீட்பு நடவடிக்கையில் கவனம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளது. இனி மறுவாழ்வு தொடர்பான பணிகள் நம்முன் உள்ளன. நிலமும் வீடும் நாசமடைந்தவர்களும் சாகுபடி நாசத்தை எதிர்கொண்டவர்களும் வீடுகளில் பழுது ஏற்பட்டவர்களும் உள்ளனர். நாம் ஒன்றுபட்டு இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டும்.  மண்ணுக்குள் புதையுண்டவர்களை கண்டுபிடிக்கும் முயற்சி தொடர்கிறது. தேவையான நடவடிக்கைகளை நாட்டு மக்களோடு சேர்ந்து அரசு மேற்கொள்ளும். விபத்து ஏற்பட்ட நாள்முதல் ஏ.கே.சசீந்திரனும், ராமச்சந்திரன் கடனப்பள்ளி உள்ளிட்ட அமைச்சர்களும் இங்கே உள்ளனர். தலைமைச் செயலாளரும் மாநில காவல்துறை தலைவரும் செவ்வாயன்று இங்கு வந்தனர். அனைத்தையும் ஒன்றுபட்டு எதிர் கொள்வோம் என முதல்வர் கூறினார். முகாமில் தங்கியிருக்கும் மக்களிடம் சுமார் அரைமணி நேரம் பினராயி விஜயன் குறைகளையும் துயரங்களையும் கேட்டார்.