கேரளாவில் மார்ச் 8ம் தேதி மகளிர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பெண் காவலர்களிடம் முக்கிய பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்தாக அம்மாநில டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரள டிஜிபி லோகநாத் பெஹெரா சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
உலக மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அன்றைய தினம் பெண் காவலர்கள் தலைமையேற்க வேண்டும். மகளிர் தினத்தன்று அனைத்து காவல் நிலையங்களிலும் 'ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகள்'(SHO), தங்கள் காவல் நிலையங்களில் உள்ள பெண் காவலர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உரிய பெண் காவலர்கள் இல்லாத காவல் நிலையங்களில் மூத்த அதிகாரிகள் பணியை மேற்கொள்வர். அதேபோன்று சர்வதேச மகளிர் தினத்தன்று முதல்வரின் வாகனப் பாதுகாப்பில் பெண்கள் கமாண்டோக்கள் பணியில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, சர்வதேச மகளிர் தினத்தின் ஒரு பகுதியாக மகளிர் தினத்தன்று ரயில் முழுவதும் பெண்களால் இயக்கப்படும் என்று கேரள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்தார்.
'மார்ச் 8 ஆம் தேதி காலை 10.15 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து புறப்படும் வெனாட் எக்ஸ்பிரஸ் பெண்களால் இயக்கப்படும். லோகோ பைலட், உதவி லோகோ பைலட், பாயிண்ட்ஸ்மேன், கேட் கீப்பர் மற்றும் டிராக் வுமன் அனைவரும் பெண்களாக இருப்பார்கள். டிக்கெட் முன்பதிவு அலுவலகம், தகவல் மையம், சிக்னல், வண்டி மற்றும் வேகன் இயக்கம் உள்ளிட்ட பொறுப்புகளிலும் பெண் அதிகாரிகளே இருப்பார்கள்.
இந்த ரயில் பயணத்தை தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. இது மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம்' என்று அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.