tamilnadu

img

வீட்டிலிருந்து மருத்துவரை சந்திக்கும் ‘இ-சஞ்சீவனி’ டெலி மெடிசின் திட்டம்: கே.கே.சைலஜா துவக்கி வைத்தார்

திருவனந்தபுரம்,  ஜுன் 10-     வீட்டிலிருந்து கொண்டே மருத்துவரை சந்திக்கும் இ-சஞ்சீவனி என்கிற டெலி மெடிசின் திட்டத்தை கேரள சுகாதாரத்துறை  அமைச்சர் கே.கே.சைலஜா துவக்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கோவிட் நோய் தொற்று பரவலைத் தொடர்ந்து சாதாரண நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்வதை இயன்றவரை தவிர்க்கும் வகையில் டெலி மெடிசின் முறை துவக்கப்பட்டுள்ளது என்றார். டெலிமெடிசின் ஆலோசனையான இ-சஞ்சீவனி நாட்டின் முதல் தேசிய ஆன்லைன் புறநோயாளி (ஓ.பி) அமைப்பாகும். மருத்துவர்கள் , தனிநபர்களை பரிசோதனை செய்வதற்கான மிக நவீனமான பயனுள்ள வழி இது. தனிநபர்களின் முந்தைய மருத்துவ பதிவுகளை மருத்துவர் சரிபார்க்க இதன் மூலம் முடியும். அவர்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் அதிகம் இருந்தால், அவர்களுக்கு போர்டலில் பதிவு செய்யவும் சிகிச்சை பெறுவதற்கான வசதியும் இதில் உள்ளது. இந்த சேவை முற்றிலும் இலவசமாகும்.  

இதன் மூலம் கோவிட் கால பயணத்தை தவிர்க்கவும், மருத்துவமனைக்கு செல்லாமலே சிகிச்சை பெறவும் முடியும். அதுமட்டுல்லாமல் கோவிட் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ளவர்களும் இந்த ஏற்பாட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். வாழ்வியல் நோய்கள், மனநலப் பிரச்சனைகளுக்காக சிகிச்சை பெறுவோர் உட்பட இந்த ஏற்பாட்டை பயன்படுத்தலாம். ஸ்மார்ட் போன், கணினி, மடிகணினி  போன்ற ஏதேனும் ஒன்றுடன் இணையத் தொடர்பு மட்டுமே இதற்கு தேவை. esanjeevaniopd.in/kerala என்கிற இணைய தளத்திற்கு சென்று இந்த சேவையை பெறலாம். இந்த தளத்துக்குள் நுழைந்த பிறகு வீடியோ கான்பரன்ஸ் மூலம் மருத்துவருடன் நேரடியாக நோய் விவரங்கள் குறித்து பேசலாம். ஆன்லைன் ஆலோசனைக்குப் பிறகு மருந்து குறிப்புகளை உடனடியாக பதிவிறக்கும் செய்து கொள்ளலாம்.  

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை டெலி மெடிசின் ஓ.பி செயல்படும். முதல் கட்டத்தில், கேரளாவின் 7 மருத்துவ அதிகாரிகள் உட்பட பயிற்சி பெற்ற 32 அரசு மருத்துவர்கள் ‘திசா’ அழைப்பு மையத்தின் உதவியுடன் இந்த சேவை அளிக்க உள்ளனர். அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்த டெலி மெடிசின் ஆலோசனையை பரவலாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு திசா அழைப்பு மையத்தின் 1056 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர்.ராஜன், என்.கோப்ராகடே, என்எச்எம் மாநில இயக்குநர் ரத்தன் கேல்கர், மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர். பி.வி.அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் சோதனை முறையில் சேவை வழங்கிய பிறகே டெலி மெடிசின் முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது.