‘எல்லா மாநிலங்களிலும் கொரோனா தொற்று கூடிக் கொண்டே போகிறது. கேரளாவில் குறைந்து கொண்டே வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அம்மாநில அரசின் நடவடிக்கைகள் சபாஷ் போட வைக்கின்றன.
கொரோனா நோய்த் தொற்று முதலில் பரவிய மாநிலம் கேரளம். தமிழகத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டவர் எண்ணிக்கை பத்துக்கள் இருந்தபோது, நூறைத் தாண்டி விட்டது கேரளம். தமிழகம் பத்தைத் தாண்டும் போது கேரளம் 200ஐ தாண்டிவிட்டது. இப்படியே போனால் சமூகத் தொற்றாக மாறி மொத்த மாநிலமுமே கேள்விக்குறியாகும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் அனைவரையும் ஆச்சரியக்குறியாகப் பார்க்கும் அளவுக்கு செயல்பட்டு விட்டார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தமிழகத்தில் 203, 231, 266, 527, 508, 771, 580, 600, 669 என எகிறிக் கொண்டிருக்கும் போது, கேரளாவில் நிலவரம் 0,2,0,0,3,0,0,1 என்று தான் இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 7,200 ஐ தாண்டிவிட்டது. ஆனால், ஒரு மாத காலமாக 500 என்ற எண்ணிக்கையைத் தாண்டாமல் கேரளா கவனித்துக் கொள்ளப்பட்டுள்ளது அம்மாநில அரசால்!
மகாராஷ்டிரம் 20,228, குஜராத்7,796, தில்லி 6,542, ராஜஸ்தான் 3,708, மத்தியப் பிரதேசம் 3,614, உத்தரப்பிரதேசம் 3,373, ஆந்திரா 1,730, பஞ்சாப் 1,762, தெலுங்கானா 1,163, ஜம்மு - காஷ்மீர் 836, கர்நாடகம் 794, ஹரியானா 675, பீகார் 591 - இதனையெல்லாம் தடுத்து கேரளாவை கொண்டு வந்து (505) நிறுத்தி விட்டார் பினராயி விஜயன். இம்மாநிலங்களில் எல்லாம் தினமும் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கேரளாவில் அப்படியே நிறுத்தப்பட்டு விட்டது!
பாதிக்கப்பட்ட 505 பேரில் 474 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டார்கள். நான்கு பேர் இறந்துள்ளார்கள். மற்றவர்கள் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
இதற்கு என்ன காரணம்? அம்மாநில அரசு கொரோனாவை எதிர்த்து மட்டும் போராடியது. அதுதான் உண்மையான காரணம். இதனால்தான் வாஷிங்டன் போஸ்ட் பினராயி விஜயனை பாராட்டி எழுதுகிறது. அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலாஜாவை ‘Vogue’ இதழ் பாராட்டுகிறது. மத்திய பாஜக அரசே, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கேரளா எடுத்த முயற்சிகளைத்தான் குறிப்பிட்டது. ஓ! கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலமா? எதுவுமே கிடைக்காதே என்று இளக்காரமாகப் பதிவு போடுபவர்கள் கூட அடக்கி வாசிக்கிறார்கள். ஏனென்றால், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலத்தில் உயிருக்கு உத்தரவாதம் உண்டு என்பதை கேரளா மெய்ப்பித்திருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி போல - பினராயிவிஜயன் உளறவில்லை. கொரோனாவை மறைக்கவில்லை. எல்லாம் தெரிந்தவர் போல பேசவில்லை. ரேபிட் கிஸ்ட் சிட்ஸ் வாங்கியதில் கொள்ளை இல்லை; காண்ட்ராக்ட், டெண்டர் விஷயங்களில் கவலைப்படவில்லை. ஊரடங்கு நேரத்தில் மதுக்கடைகளை திறக்கவில்லை!
‘கோயிலே மூடியிருக்கும் போது, மதுக்கடையை ஏன் திறக்க வேண்டும்’ என்று கேட்டார். ‘காவலர்களுக்கு வேறு முக்கியமான வேலைகள் இருக்கிறது’ என்றார். இங்கே போல், கொரோனா காலத்திலும் கல்லா கட்ட நினைக்கவில்லை!
இத்தனைக்கும் மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் மாநிலம் கேரளம். நிதி வழங்கப்படுவதே இல்லை. கேரளத்தை மத்திய ஆட்சி மதிப்பதே இல்லை. இப்படி ஒரு மாநிலம் இருப்பதாகவும் நினைப்பது இல்லை. இத்தகையச் சூழலில் சாதித்தது தான் முக்கியமானது.
வல்லரசுகளால் சாதிக்க முடியாததை ஒரு கம்யூனிஸ்ட் அரசு சாதித்துள்ளது.
குஜராத்தில் இதுவரை 472 பேர் இறந்துள்ளார்கள். 1995ல் இருந்து பாஜக ஆளும் மாநிலம் அது. குஜராத் மாடல் என்று வாய்கிழியப் பேசப்பட்ட மாநிலத்தின் கதி இதுதான் என்றால் இந்தியாவுக்குத் தேவை கேரள மாடல் அல்லவா?
நன்றி: முரசொலி (12.5.2020)