tamilnadu

கும்பகோணம் அருகே கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் மீண்டும் அராஜகம் `

கும்பகோணம், ஜூலை 14-  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர், சுவாமிமலை, திருப்புறம்பயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குநருக்கான தேர்தல் பல்வேறு முறைகேடுகளால் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனர் பதவி செல்லாது என தேர்தல் இயக்ககம் அறிவித்ததால் தற்போது கூட்டுறவு சங்க தேர்தல் மீண்டும் நடைபெற்று வருகிறது. இதில் கூட்டுறவு தேர்தல் இயக்ககம் உத்தரவின்படி நிறுத்தி வைக்கப்பட்ட கும்பகோணம் தாலுகாவுக்கு உட்பட்ட உடையாளூர் திருப்புறம்பியம் சுவாமிமலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை தேர்தலில் கூட்டுறவு சங்க அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்து வந்தனர். இந்நிலையில் உடையாளூரில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க., அ.ம.மு.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன.  ஓட்டுப் பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், உடையாளூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பூபதி(70) என்ற மூதாட்டி ஓட்டு போட வரிசையில் நின்ற போது, அதிமுகவினர் சிலர் மூதாட்டியின் ஓட்டு சீட்டை வாங்கி ஓட்டுப் போட்டுள்ளனர். இதையடுத்து மூதாட்டி பூபதி சத்தம் போட்டுள்ளார். தொடர்ந்து அமமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன், துணை பொது செயலாளர் ரெங்கசாமி ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனிடம் இந்தப் புகாரை தெரிவித்தனர். தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளனர். அப்போது அங்கு வந்த அதிமுக ஒன்றிய செயலாளர் அறிவழகன், திருவிடைமருதுார் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், நகர செயலாளர் ராமநாதன் ஆகியோர் தலைமையில் 150-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.  இதை தொடர்ந்து கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுகவினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் ஒருவரை ஒருவர் கள்ள ஓட்டு போடுறாங்க என குற்றம்சாட்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆளுங்கட்சியினர் தேர்தலை நிறுத்த திட்டமிட்டதாக புகார் தெரிவித்ததை தொடர்ந்து, கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் இரு தரப்பையும் பேசி சமாதானம் செய்தார். ஆளும்கட்சியினர் தேர்தல் நடத்தக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அமமுகவினர் தேர்தலை நடத்த வேண்டும் என முறையிட்டனர். அப்போது தேர்தல் மையத்தில் சிலர் கல்லை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 50-க்கு மேற்பட்ட காவல்துறையினர் அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர். இதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.