tamilnadu

வீடுகளுக்கு வந்து தரமற்ற போலி உரங்கள் விற்பனை : ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தரமற்ற போலி உரங்கள் விவசாயிகளுக்கு வெளி மாவட்ட நபர்களால் உர உரிமமின்றி விற்பனை செய்யப்படுவதாக பெறப்பட்ட தகவலினைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டஆட்சியர் சந்தீப் நந்தூரி விவசாயிகள்எச்சரிக்கையாக இருந்திட ஒரு செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

பயிரின் சீரான வளர்ச்சிக்கும் அதிக மகசூலுக்கும் தரமான உரமிடுவது அவசியம். தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்குத் தேவையான இரசாயன உரங்கள் மற்றும் இயற்கை உரங்கள் போதியஅளவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளது. பயிருக்குத் தேவையானசத்துகளை வழங்க ஏதுவாகவே இந்த உரங்கள் தயாரிக்கப்பட்டு உரங்களில் உள்ள சத்துகளின் அளவின் அடிப்படையிலேயே தேவையான உர அளவு பரிந்துரை செய்யப்படுகிறது. இவ்வாறு உரக்கட்டுப்பாடு சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட முறையில் தயாரிக்கப்படும் இயற்கை மற்றும் இரசாயன உரங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவு சத்துகள் இருக்கும். எனவேவிவசாயிகள் உத்தரவாதத்துடன் இவ் உரங்களை வாங்கிப் பயிருக்கு இடலாம்.ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் புதூர் வட்டாரங்களில் அங்கீகரிக்கப்படாத உர உரிமம் இல்லாத உர விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகாலையில் லாரிகளில் கொண்டு வந்து இயற்கை உரம்என்ற பெயரில் விவசாயிகளின் வீடுகளிலேகொண்டு வந்து உரத்தை இறக்கி விற்பனைமேற்கொண்டிருப்பது தெரிய வருகிறது.

எனவே விவசாயிகள் கிராமங்களில் வீடுகளில் நேரடியாக வந்து உரம் விற்பனை செய்வதாக தெரிவித்து விற்பனைசெய்ய வந்தால் அருகில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலத்திற்கு தகவல் தெரிவித்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. போலி உரங்கள் விற்பனை செய்யும்நபர்களிடம் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.