tamilnadu

img

ட்ரம்ப் வருகையையொட்டி குடிசை  வாசிகளை காலி செய்ய வற்புறுத்தும் அகமதாபாத் நகராட்சி?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையை முன்னிட்டு மொடேரா பகுதி குடிசைவாசிகள் காலி செய்ய அகமதாபாத் நகராட்சி நோட்டீஸ் அனுப்பியதாக குடிசை வாசிகள்  குற்றம் சாட்டி உள்ளனர். 
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 24 மற்றும் 25 ஆகிய 2 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். 24 ஆம் தேதி குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதால், டிரம்ப் பயணிக்கும் வழிகளில்,சாலைகளை அவசரகதியில்  புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்துக்கு அருகிலுள்ள குடிசைவாரிய குடியிருப்புகளை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு அரைகிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் ஒன்றை அகமதாபாத் மாநகராட்சி கட்டி உள்ளது. அகமதாபாத்திலிருந்து காந்திநகர் நோக்கி செல்லும் திசையில் சுவர் கட்டப்பட்டுள்ளது. அந்த குடிசைவாரியக் குடியிருப்பில் பத்துவருடங்களுக்கும் மேலாக 500 வீடுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். நாடு முழுவதும் குஜராத் போன்ற வளர்ச்சி என்று மார்தட்டி வந்த மோடி முன்னாள் முதல்வராக, நாட்டின் பிரதமராக தனது ஆட்சியின் அவலங்களை மறைக்க சுவர் எழுப்ப வேண்டிய நிலையில் உள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வைரலாகி வருகிறது. 
இந்த நிலையில், டிரம்ப் வருகையை முன்னிட்டு மொடேரா பகுதி குடிசை வாசிகள் 7 நாட்களில் காலி செய்யுமாறு அகமதாபத் நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அளித்துள்ளது.  சுமார் 45 குடும்பத்தினர் அப்பகுதியில் வசித்து வரும் நிலையில், அவர்களை வெளியேறுமாறு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள்கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
குடியிருப்பு வாசிகள் தங்களை வெளியேறுமாறு அதிகாரிகள் கூறியதாக தெரிவித்து வரும் நிலையில், நகராட்சி நிர்வாகிகள் அதுபோன்ற எந்த நோட்டீசையும் அனுப்பவில்லை என்று மறுத்துள்ளனர்.