tamilnadu

img

விளை நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 25- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளை நிலங்களை கையகப்படுத்தி ‘பாரத்’ பெட்ரோலியம் நிறுவனம் குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கர்நாடகா மாவட்டம் தேவனகுந்திக்கு பெட்ரோல் மற்றும் தாதுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கும் திட்டத்தை 20.4.2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது. 1962ஆம் ஆண்டு சட்டப்படி இந்த குழாய் செல்லும் வழியில் நில உபயோக உரிமையை கையகப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் விவசாயிகளின் நல்ல விளை நிலங்களின் மீது 750 கி.மீ. தூரத்திற்கு நிலம் எடுக்க அளவீடு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 51 கி.மீ. தூரத்திற்கு 1,200 விவசாயிகளுக்கு சொந்தமான 3,200 ஏக்கர் நிலத்தை  எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் 3 தலைமுறைக ளுக்கும் மேலாக பயிர் செய்து வரும் தென்பென்னை ஆற்றங்கரை ஓரமுள்ள செழிப்பான நிலங்கள் அதிகமாக உள்ளன.

பல நூறு சிறு, குறு விவசாயிகளின் நிலமும் பறிபோகும் என்பதால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் போராட்டங்களை நடத்தியது. இதையடுத்து அரசும், பாரத் பெட்ரோலியம், ஐடிபிஎல் நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை நிறுத்தி வைத்தன. இந்நிலையில், இந்த திட்டத்தின் தருமபுரி தனித் துணை ஆட்சியர் ஓசூர், சூளகிரி, பலவனப்பள்ளி, முத்தாலி, சின்னமுத்தலி, காமன்தொட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 20 விவசாயிகளுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார். அதில் நிலம் எடுக்கும் திட்டம் பற்றியும், ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தவர்கள் நேரில் விசாரணைக்கு வந்து எதிர்ப்பை தெரிவிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், பொருளாளர் எஸ்.முனியப்பா மற்றும் விசாரணைக்கு வந்த 20 விவசாயிகள் இத்திட்டத்தின் தனித்துணை ஆட்சியரை சந்தித்து, கொரோனா பொதுமுடக்க காலத்தில் விசாரணைக்கு அழைத்திருப்பதும், நிலம் எடுக்க ஏற்கனவே 4 முறை எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்திருக்கும் தற்போது மீண்டும் அழைத்திருப்பது மிரட்டுவது போல் உள்ளது என்றும் நிலம் கையகப்படுத்த விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி மனு அளித்தனர். இந்த திட்டத்தின் தலைமை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஒப்புதலோடுதான் இந்த விசாரணை நடத்தப்படுகிறது என தனித்துணை வட்டாட்சியர் கூறினார்.  அத்துடன் தனித்தனியாக விவசாயிகளிடம் விசாரணை நடத்திய போதும், அனைவரும் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததுடன், தனிதனியே மனுவும் அளித்தனர்.