நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் நியூஸிலாந்து நாட்டின் முக்கிய நகரான வெல்லிங்டனில் வெள்ளியன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே திணறியது. பிரித்வி ஷா (16), புஜாரா (11), கேப்டன் கோலி (2) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறத் தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் (34) முதல் சீசன் முழு வதும் அசத்தலாக விளையாடி சிறப்பு சாதனையுடன் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். அவரும் ஆட்டமிழக்க அடுத்து கள மிறங்கிய மூத்த வீரர் ரஹானே விக்கெட் சரிவை கட்டுப்படுத்த நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிகம் எதிர்பார்த்த ஹனும விஹாரி (7) சொதப்ப, அடுத்து ரிஷப் பண்ட் களமிறங்கினார். தனது வழக்கமான அதிரடியை கைவிட்டு விக்கெட்டுகள் சரியாதவாறு உதிரியாக ரன் சேர்த்தார்.
இந்திய அணி 55 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. மழை விட்ட போதும் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால், தொடர்ந்து போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். ரஹானே (38), ரிஷப் பண்ட் (10) ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து அணி தரப்பில் கெயில் ஜேமிசன் 3 விக்கெட்டு களை வீழ்த்தினார். சனியன்று 2-ஆவது நாள் ஆட்டம் தொடங்குகிறது.