உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வீரர்களுக்குச் சலுகை என்ற பெயரில் பணத்தை வாரி இறைத்தாலும் ஜெர்சி (உடை) விவகாரத்தில் கண்டிப்புடன் நடந்துகொள்ளும். அதாவது உலகத்தரம் வாய்ந்த டிசைன்களில் ஜெர்சி வடிவமைத்தாலும் நீல நிறத்தில் தான் இருக்க வேண்டும் என்பது மரபு. தேசியக் கொடியில் உள்ள காவி நிறம் நாட்டின் பெயருக்கும், வீரர்களின் பெயர் நிறம் மற்றும் எண்களுக்கு லேசாகத் தீட்டப்பட்டிருக்கும். மற்ற நாடுகளைப் போல அடிக்கடி ஜெர்சியை மாற்றாமல் 2 அல்லது 3 வருட இடைவெளிக்குப் பின் ஜெர்சியை மாற்றும். உலகக்கோப்பை தொடருக்கு மட்டும் தனியாக வடிவமைக்கும். அதுவும் நீல நிறத்தில் தான். எந்த தொடராக இருந்தாலும் இரண்டு வகையான வண்ணங்களில் ஜெர்சியை இந்திய அணி இதுவரை அணிந்ததில்லை. ஜெர்சி விவகாரத்தில் தனி விதிகள் எதுவும் இல்லையென்றாலும் காலம் காலமாக நடைமுறையில் இருப்பதால் பிசிசிஐ இதை ஒரு மரபாகச் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் 12-வது சீசன் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் நாடுகள் ஒரே வண்ணத்தில் ஜெர்சி அணிந்திருந்தால் மாற்று ஜெர்சியை அணிந்து கொள்ளலாம் எனவும் தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்படுவதாகவும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) அறிவித்தது. இங்கிலாந்து அணி வழக்கத்திற்கு மாறாக வெளிர் நீல நிறத்தால் ஆன ஜெர்சியுடன் களமிறங்கியது. இந்திய அணியின் ஜெர்சியை போன்று இருப்பதாகத் தொடக்கத்திலேயே சர்ச்சை வெடித்தது என்றாலும் நாட்கள் செல்லச் செல்ல இந்த விவகாரம் கானல் நீரைப் போன்று காணாமல் போனது. 38-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஜெர்சி காவி(ஆரஞ்சு) நிறத்திற்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. கிரிக்கெட்டிலும் காவியா என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஆளும் பாஜக கட்சியை எண்ணெய் ஊற்றாமல் வறுத்தெடுத்தனர். காவி ஜெர்சி உண்மையில்லை என மற்றொரு தகவல் கசிய ரசிகர்கள் வழக்கம் போல போட்டியை ரசிக்கத் தொடங்கினர். ஜெர்சி விவகாரத்தில் இங்கிலாந்து அணிக்கு விலக்கு இருப்பதால் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி காவி நிற ஜெர்சி அணிந்து பங்கேற்பதாக மீண்டும் புகைப்படத்துடன் தகவல் வெளியாகியுள்ளது. 1992ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்திய அணிக்கு 24 முறை ஜெர்சி மாற்றப்பட்டுள்ள நிலையில் அதில் நீல நிறமே அதிகமாக இடம் பெற்றுள்ளது. கேளிக்கை அம்சமான கிரிக்கெட் விளையாட்டிலும் அரசியல் சார்பான காவி வண்ணத்தை நுழைக்க மோடி அரசு முயல்வதால் இந்திய கிரிக்கெட் உலகம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் போர்க்கொடி
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டையே காவி மயமாக மாற்ற முயன்று வருகிறது. பாஸ்போர்ட் முதல் வாக னங்கள் செல்லும் பாலம் வரை அனைத்தையும் காவி வண்ணத்தில் மாற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொழுதுபோக்கு துறையான கிரிக்கெட் விளையாட்டில் கூட காவி வண்ணமா எனக் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் எச்சரிக்கையுடன் பாஜக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.