உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக்கில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி மந்தமான ஆட்டத்திறனால் தோல்வியடைந்தது என்பதை உணராமல் அணி வீரர்கள் விதிமீறி செயல்பட்டதால் தான் தோல்வி கண்டது என பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அறிவுரையை மதிக்காததும், டாஸ் வென்றும் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்த பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுவின் தொலைநோக்கு இல்லா திட்டமும், சோயப் மாலிக் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு தனது மனைவி சானியா மிர்சாவுடன் ஷீஷா பாரில் இருந்ததாகவும், அங்கு பாகிஸ்தான் வீரர்கள் சிலர் புகைப்பிடித்தலில் ஈடுபட்டதாகவும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தோல்வியை கூட பொறுத்துக்கொண்ட பாகிஸ்தான் அரசு வீரர்கள் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டைக் கண்டு பொங்கியெழுந்தது. இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் நாட்டின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் ஷிரீன் மஸாரி (பெண்) அந்நாட்டு வீரர்களுக்குக் கண்டனத்துடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் வீரர்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) விளக்கமளித்துள்ளது. அதில்,” சமூகவலைத்தளங்களில் பரவியுள்ள வீடியோவும், புகைப்படமும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறுவதற்கு இரு நாள்கள் முன்பு எடுக்கப்பட்டவை. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முந்தைய நாளன்று எல்லா வீரர்களும் அவரவர் உணவக அறையில்தான் இருந்தார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் யாரும் விதிமுறைகளை மீறவில்லை” என்று தெரிவித்துள்ளது.
சோயப் மாலிக் டுவிட்...
ஷீஷா பார் விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் மற்றும் அவரது மனைவியும் இந்திய டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சா ஆகியோர் இணைந்து டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளனர். அதில்,”ஷீஷா பார் வீடியோக்கள் 13-ஆம் தேதி எடுக்கப்பட்டவை. 15-ஆம் தேதியில் அல்ல. நாட்டுக்காக 20 வருடங்கள் உழைத்தபோதும் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் விளக்க வேண்டியிருப்பது வேதனைக்குரியது. பாகிஸ்தான் ஊடகம் நம்பகத்தன்மையுடனும், பொறுப்புடனும் எப்போது நடந்துகொள்ளப் போகிறதோ” என்று டுவிட் செய்துள்ளார்.