tamilnadu

img

ராஞ்சி டெஸ்ட் வெற்றியின் விளிம்பில் இந்திய அணி

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு ஆட்டத்தில் (விசாகப்பட்டினம், புனே) இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் சனியன்று தொடங்கியது.   ரோஹித் சர்மாவின் இரட்டை சதம் (212) மற்றும் ரஹானேவின் (115) சதத்தின் உதவியால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 479 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜ் (சுழல்) 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி வழக்கம் போலத் தொடக்கத்திலேயே திணறியது. முதல் ஆட்டத்தின் போலவே வெளிச்சமின்மை பிரச்சனை காரணமாக 2-ஆம் ஆட்டம் விரைவாக முடிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணி 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 9 ரன் எடுத்திருந்த நிலையில், திங்களன்று 3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. 3-ஆவது நாளில் இந்திய அணியின் மிரட்டலான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறிய தென் ஆப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் அடுத்தது பெவிலியன் திரும்பினர். ஹம்சா (67), பாவுமா (32), ஜார்ஜ் (37) ஆகியோர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் நடையைக் கட்டினர். தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 56.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றுத் தொடர்ந்து விளையாடியது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பாலோ ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் வழக்கம் போலச் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷமியின் பந்துவீச்சிற்கு அடுத்தடுத்து இரையாகி பெவிலியன் திரும்பினார்கள்.  2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 46 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது. ஆன்ட்ரிச் (5), பிரயூன்(30)ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4-வது நாளின் மதிய உணவு இடைவேளைக்கு முன்பு தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்து ஒயிட் வாஷ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

145 கிமீ வேக பவுன்சர்... அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த எல்கர் 

3-ஆவது நாளின் தேநீர் இடைவேளைக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவின் 145 கிமீ வேக பவுன்சர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் தவறவிட்டு ஹெல்மெட்டில் அடி வாங்கினார். அதுவும் சாதாரண அடி அல்ல. ஹெல்மெட் விரிசல் ஏற்படும் அளவிற்குப் பந்து  தாக்கியுள்ளது. வலது புற காதிற்கு அருகில் ஹெல்மெட்டைத் தாக்கிய உமேஷின் பவுன்சரால் நிலைகுலைந்த எல்கர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்து ஆட்டமிழக்காமல் (ரிட்டையர்டு) பெவிலியன் சென்றார். 

71 ஆண்டு கால வரலாற்றைத் தகர்த்த ரோஹித் 

டான் பிராட்மேனின் சொந்த மண் சாதனையை ரோஹித் சர்மா 71 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வரலாறு படைத்துள்ளார். 18 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் டான் பிராட்மேன் தனது சொந்த மண்ணில் (ஆஸ்திரேலியா - 1948) 98.22 பேட்டிங் சராசரி வைத்திருந்தார். ரோஹித் சர்மா இந்திய மண்ணில் சராசரி 99.84 பேட்டிங் சராசரி வைத்து டான் பிராட்மேனின் 71 ஆண்டுகால சாதனையைத் தகர்த்துள்ளார்.