சென்னை,ஆக.16- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர் தற்கொலை செய்து இறந்துள்ளார். காஞ்சி வீரன்ஸ் என்ற டிஎன்பிஎல் அணியின் உரிமையாளரான இவர், கடன் பிரச்சனையில் சிக்கியதே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதிரடி பேட்டிங்கால் கவனத்தை ஈர்த்த வி.பி. சந்திரசேகர். 1988ஆம் ஆண்டில் இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றபோது, 56 பந்துகளில் சதம் அடித்து தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு வழிவகுத்தவர். இந்திய அணிக்காக ஏழு போட்டிகளில் விளையாடியுள்ளார். பின்னர் கிரிக்கெட் வர்ணணையாளராக, பயிற்சியாளராக, ரஞ்சி மற்றும் இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் குழு உறுப்பினராக செயல்பட்டார். 2008ஆம் ஆண்டில், சென்னை சூப்பர் கிங்ஸ் தொடங்கப்பட்டபோது, அதன் முதல் செயல் இயக்குநராக இருந்தார்.
டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடங்கப்பட்டபோது, திருவள்ளூர் அணியை நடத்தி வந்த சந்திரசேகர், 2 ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சி வீரன்ஸ் அணியை 4 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். தனிமனிதராக தனது சேமிப்புகள் மற்றும் வங்கியில் கடன் வாங்கியுமே அணியை நடத்தி வந்ததாக சொல்கிறார்கள். இதனால் அவர் கடன் பிரச்சனையில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழனன்று மாலை சந்திரசேகர் வீட்டில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவிலில் இருந்து திரும்பி வந்த குடும்பத்தினர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்காத நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.