இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய இடைக்கால சிஇஓவாக ஹேமங் அமீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பி.சி.சி.ஐ.) தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2016ம் ஆண்டு ராகுல் ஜோரி பதவியேற்றார். அதற்கு முன் சசாங் மனோகர் அந்த பதவியை வகித்து வந்துள்ளார். ஜோரி கடந்த சில மாதங்களுக்கு முன் தனது பதவியில் இருந்து விலகினார். அவரது ராஜினாமாவை பரிசீலனையில் வைத்திருந்த பி.சி.சி.ஐ., கடந்த வாரம் ஏற்று கொண்டது.
தற்போது பி.சி.சி.ஐ.யின் புதிய இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகளுக்கான சி.ஓ.ஓ.வாக ஹேமங் இருந்து வருகிறார். அவர், பி.சி.சி.ஐ.யின் இடைக்கால சி.இ.ஓ. பதவியையும் கூடுதலாக ஏற்று கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.