tamilnadu

img

அதிரடி நாயகன் யுவராஜ் சிங் ஓய்வு

2000-ஆம் ஆண்டு நடைபெற்ற யு-19 (இளையோர்) உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியது.இந்த அணியில் இடம்பெற்றிருந்த யுவராஜ் சிங்  அதே ஆண்டில் தேசிய அணிக்கு அறிமுகமானார்.  அதிரடியான பேட்டிங், துல்லியமான பந்துவீச்சு, துடிப்பான பீல்டிங் என மூன்று பிரிவுகளிலும் 12 வருடம் (2000 - 2011) இந்திய கிரிக்கெட்டின் தனிக்காட்டு ராஜாவாக வெற்றி நடையுடன் வலம் வந்தார்.  3 ஒருநாள் உலகக்கோப்பை (2003, 2007, 2011) தொடர்களில் பங்குபெற்ற யுவராஜ் சிங் இந்திய துணைக்கண்டத்தில் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்திய அணி கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர். இதுபோக 2007-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி-20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற பல்வேறு வகையில் உதவி புரிந்தார். இந்த தொடரில் 6 பந்திற்கு 6 சிக்ஸர் விளாசி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.   2011 உலகக்கோப்பை நிறைவு பெற்ற அடுத்த சில மாதங்களில் புற்றுநோய் தாக்கத்தில் சிக்கி உடலின் சக்தியை இழந்தார். தீவிர சிகிச்சைக்குப் பின்பு இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் முன்பு போல் கிரிக்கெட் விளையாட முடியவில்லை. கடைசியாக 2017-ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடினார். அதன்பிறகு நடந்த யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்ததால் ஓரங்கட்டப்பட்டார். ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்தார்.  இந்நிலையில் திங்களன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 40 டெஸ்ட் (1900 ரன்கள்), 304 ஒருநாள் (8701 ரன்கள்), 58 டி-20 (1177 ரன்கள்) போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.   யுவராஜ் சிங்கின் திடீர் ஓய்வு முடிவால் அவரது ரசிகர்கள் சோகத்துடன் கூடிய போஸ்டிங்கை சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.