tamilnadu

img

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரத்தானால் 4,000 கோடி ரூபாய் இழப்பு...   அதிர்ச்சியில் பிசிசிஐ

மும்பை 
உலகின் முதன்மையான உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் 13-வது சீசன், கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடர் மறு அறிவிப்பு தேதி அறிவிப்பின்றி ஒத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.  

இந்நிலையில் கொரோனா தாக்குதல் காரணமாக நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 3994.64 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,"பிசிசிஐ மிகப்பெரிய வருவாய் இழப்பை எதிர்நோக்கி உள்ளது. ஒருவேளை நடப்பாண்டில் ஐபிஎல் போட்டி நடைபெறாவிட்டால் 3994.64 கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்கும் நிலைமை உருவாகும். மேலும் நடப்பாண்டு ஐபிஎல் போட்டி நடத்த நேரம் கிடைக்குமா? என்பதை எங்களால் (பிசிசிஐ) உறுதியாகச் சொல்ல முடியாது. குறிப்பாக எத்தனை போட்டிகளை இழக்கிறோம் என்பதை பொறுத்துத்தான் சரியான இழப்பு தொகையைக் கூற முடியும். ஒருவேளை போட்டி நடைபெற்றிருந்தால் பிராண்ட் மதிப்பு மூலம் 6.7 பில்லியன் டாலர் வருவாய் (50 ஆயிரம் கோடி) கிடைக்கும் என திட்டமிடப்பட்டிருந்தது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மூலம் 220 மில்லியன் டாலர் (16 ஆயிரம் கோடி) கிடைக்கும்" என கூறினார். 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் உள்ளூர் போட்டிக்கான இழப்பீடு தொகை பற்றி அறிக்கை அளிப்பது இதுவே முதன்முறையாகும். ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டால் நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் பற்றிச் சிந்திக்க முடியும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

;