துபாய்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆடும் லெவன் ஆல்ரவுண்டரான கேதார் ஜாதவ் மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்தவர். இவர் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதின. பரபரப்பாக ஆட்டத்தில் வெற்றியை நோக்கிச் சென்ற சென்னை அணி கேதார் ஜாதவின் படுமோசமான பேட்டிங்கால் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டு மீண்டும் பார்ம் பிரச்சனையை கையிலெடுத்தது.
என்ன நடந்தது?
வெற்றியை நோக்கிச் சென்னை அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. மிடில் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற ஜடேஜா, கேதார் ஜாதவ் போராடினர். ஜடேஜா தனது வழக்கமான அதிரடிக்கு காத்திருக்க கேதார் ஜாதவ் டி-20 போட்டிக்கு பதிலாக டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் தடுப்பாட்டத்தை கையிலெடுத்து 12 பந்துகளை வீணடித்து 7 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 8 பந்துகளை சந்தித்து 21 ரன்கள் எடுத்து மிரட்டினாலும் ஜாதவ் பந்துகளை வீணடித்ததால் சோகத்துடன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
ஜாதவின் இந்த படுமோசமான செயலால் சென்னை ரசிகர்கள் கடும் கோபத்திற்கு உள்ளாகி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களுடன் விமர்சித்து வருகின்றனர். இவரை ஏன் டி-20 போட்டிகளில் களமிறக்குகிறீர்கள் டெஸ்ட் போட்டிக்கு அனுப்புங்கள் என ஆவேச குரல்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வரை ஒலிக்கின்றன. "எதிரணியை பார்த்து கூட பயம் இல்லை. ஆனால் கேதார் ஜாதவை பார்த்தாலே பயமாக இருக்கிறது. அவரை இன்னமும் சென்னை அணியில் வைத்தால் நாம் வெறுங்கையோடு தான் நாடு திரும்புவோம்" என தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் பொங்குகின்றனர்.