tamilnadu

சிபிஎம் போராட்ட அறிவிப்புக்கு வெற்றி கொசு ஒழிப்பு நடவடிக்கையில் காஞ்சி நகராட்சி

காஞ்சிபுரம், ஆக.9- உலக பிரசித்தி பெற்ற பட்டுச் சேலைக்கும் சுற்றுலா தளத்திற்கும் பெயர் பெற்ற காஞ்சிபுரம் நகரத்திற்கு பெரு நகராட்சி அந்தஸ்து உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையாலும், பட்டுச் சேலை வாங்க வருகை தரும் மக்களாலும் காஞ்சிபுரம் நகரம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிக்கதாகவும், பரபரப்பாகவும்,  காணப்படுகிறது. இந்நகருக்கு சிறப்புகள் பல இருந்தாலும் கொசுத் தொல்லை புதிய சிறப்பாக சேர்ந்துள்ளது. நகரத்தின் ஊடாக 8 கி.மீ தொலைவிற்கு திறந்த வெளியில் மஞ்சள் நிற கால்வாய் செல்கிறது .அதில் குப்பைகளும் கழிவுகளும் தேங்கியுள்ளது. ஆங்காங்கே புதர்மண்டி அது சாக்கடை கால்வாயாக மாறிவிட்டது. திருக்காளிமேடு வரை செல்லும் இக்கால்வாய் மிகுந்த துர்நாற்றத்துடன் கொசு உற்பத்தி மையமாக மாறியுள்ளது.இதனால் காஞ்சிபுரத்திற்கு வருகைதரும் மக்களும், காஞ்சிபுரத்தில் வசிக்கும் மக்களும் மிகவும் துயரத்திற்கு ஆளாகிறார்கள். காஞ்சிபுரம் பெருநகராட்சியில் கொசுவை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. கொசுவினால் உருவாகக்கூடிய நோய்களின் தாக்கம் அதிகமாகி பல்வேறு நோய்கள் உருவாவதற்கு காரணமாக அமைவதால் மக்கள் மருத்துவமனைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். கோடைகாலம் தொடங்கியும் கொசுத்தொல்லை குறையவில்லை. அனைவரையும் கடிக்கும் கொசு ஆரோக்கியமாக வளர்ந்து வருகிறது . நெசவாளிகளும், தொழிலாளர்களும் அதிகம் வசிக்கும் காஞ்சிபுரத்தில் கொசுவை விரட்டுவதற்காக தினந்தோறும் நூற்றுக் கணக்கில் பணத்தை செலவிட்டு வருகிறார்கள். தூக்கத்தை இழந்து வாடுகிறார்கள். இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எவ்வகையான  கருவிகளுக்கும் மருந்துகளுக்கும் கொசுவர்த்தி சுருள்களுக்கும் பயப்படாமல் கொசு தனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறது.இதனால் நகர மக்கள்  மிகுந்த மன உளைச்சலுக்கு" ஆளாகியுள்ளனர். அதனால்  நகராட்சி மீது கோபம் ஏற்பட்டுள்ளது. விண்வெளிக்குச் சென்று சாதனைகள் செய்கிறோம்,ஆனால் மிகச் சிறிய அளவிலேயே உள்ள கொசுவை ஒழிக்க முடியவில்லையே என நகராட்சியின் மீது மக்கள் கோபம் கொண்டுள்ளனர்.  விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கும் சூழ்நிலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் கொசுக் கடியினால் பல்வேறு வகையான நோய்கள் உருவாகி மருத்துவத்திற்கும்,கொசு விரட்டி சாதனங்களுக்கும் செலவு செய்வது குறித்து மக்கள் வேதனையடைந்துள்ளனர். கொசுவை ஒழிப்பதற்கான கடும் நடவடிக்கைகளை நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனை செய்யாத ஆட்சியாளர்களை எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்தபிரச்சனைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் "கொசு பேசுகிறேன்" என்ற தலைப்பில் கொசு உற்பத்தியாகும் இடங்கள், கொசுவால் ஏற்படும் நோய்கள், அதற்கான தீர்வுகள் இவைகளையெல்லாம் தொகுத்து கொசுவே பேசுவதுபோல் துண்டறிக்கை தயார் செய்து காஞ்சிபுரம் முழுவதும் விநியோகிக்கப்பட்டும் நகராட்சி அசைய மறுக்கிறது. இதனால் கொசுத்தொல்லை தொடர்கிறது. இதனால் பிப்.9ஆம் தேதி காஞ்சிபுரம் 1வது-வார்டு ஒலி முகமது பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் "கொசு (கரு)த்தடை போராட்டம்" என்ற வினோதமான போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சி பெருநகரக் குழு செயலாளர் சி.சங்கர் அறிவித்திருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த காஞ்சிபுரம் நகராட்சி கொசு தடுப்பு பிரிவினர் ஒலிமுகம்மது பேட்டை பகுதி முழுவதும் சனிக்கிழமை இரவு சுத்தம் செய்து மருந்து தெளித்து கொசு விரட்டும் புகையை வீதி வீதியாக அடித்தனர். மேலும் இதுகுறித்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் சிபிஎம் தலைவர்களுடம் உறுதி அளித்ததன் பேரில் கொசு(கருத்)தடை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக நகரச் செயலாளர் சி.சங்கர் தெரிவித்தார்.  இந்தப்  போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த முதியவர் ஒருவர் கூறுகையில், ‘கொசுக்கடியால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் ஏழை எளிய மக்கள் குடியுரிமை தடைச்சட்டம் வேண்டாம். கொசு தடைச்சட்டம் என்ற போராட்டம் வித்தியாசமாக இருந்தது.இந்தப் போராட்டத்தை எங்கள் பகுதியில் நீங்கள் நடத்த வேண்டும்’ என்றார்.