காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும் புதூர் அருகே தனியார் தொலைக்காட்சி நிருபரை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுநல்லூரை சேர்ந்த மோசஸ் என்பவர் தமிழன் தொலைக் காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், அவரது வீட்டிற்கு சென்ற 4 மர்ம நபர்கள் செய்தி தருவதாக கூறி மோசஸை வெளியே அழைத்து வந்து அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக விக் னேஷ், வெங்கடேஷ், மனோஜ், நவமணி ஆகிய 4 பேரை சோமங்கலம் போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த வாரம் அதே பகுதியில் நடக்கும் கஞ்சா வியாபாரத்தையும், சமூக அவலத்தையும் பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளார். அதன் பிறகு அவருக்கு தொலைபேசி வாயிலாக பல கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.இது குறித்து அவருடைய தந்தை, அருகில் உள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தும் கூட காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த காவல் துறை சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படுவது வெளிச்சமாகிறது.
கண்டனம்
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பிஎஸ்டி புருஷோத்தமன், “கஞ்சா வியாபாரம், அரசு நிலங்களை ஆக்கிரமித்து விற் பனை செய்யும் கட்டபஞ்சாயத்து, நிலமோசடி நபர்களை அம்பலப்படுத்தி செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக தமிழன் டிவி செய்தியாளர் மோசஸ் வெட்டி படுகொலை” செய்யப்பட்டிருக்கிறார்.பின்னணியில் இருக்கும் “பவர்புல்”சமூக விரோதிகளை கூண்டோடு கைது செய்ய தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.மேலும், கொலையான பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.