tamilnadu

img

பாலாற்றில் புதிய தடுப்பணைகள் முழு கொள்ளவை எட்டியது காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

செங்கல்பட்டு, நவ.4 பாலாற்றில் புதியதாக கட்டப்பட்ட இரண்டு தடுப்பணைகள் முழு கொள்ளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலூரில் கடல் முகத்து வாரம் மூலம், பாலாற்றுப் படுகையில் உப்புநீர் ஊடுருவி வருவதால், கரை யோரங்களில் உள்ள விவசாய  நிலங்கள் பாதிக்கப்பட்டு வந்தன. பாலாற்றுப் படுகையில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளதால், வாயலூர் பாலாற்றின் முகத்துவாரப் பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும், பாலாற்றில் பத்து கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என  விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி, விவசாய சங்கம் உள்ளிட்ட அமைப்பு கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், வாயலூர் பாலாற்றின் குறுக்கே தடுப்புச்சுவர் அமைக்க கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம் கடந்த ஆண்டு ரூ.32.50 கோடி நிதி ஒதுக்கியது. இதனைத் தெடார்ந்து கடந்த ஜனவரி மாதம் பாலாற்றுப் படுகையில் தடுப்புச்சுவர் அமைப்பதற்கான பணிகளை மாவட்ட பொதுப்பணித்துறை மேற்கொண்டது. இதில், பாலாற்றுப் படுகையின் குறுக்கே 1,200 மீட்டர் நீளம், ஆற்றின் கீழே 24 அடியும், ஆற்றின் மேற்பரப்பில் 5 அடி உயரம் கொண்ட தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஈசூர்-வல்லிபுரம் கிராமப்பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க தமிழக  அரசு கடந்த 2018ஆம் ஆண்டு ரூ.30.90 கோடி நிதி ஒதுக்கியது. இதன்பேரில், மேற்கண்ட பகுதியில் உள்ள பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த இரண்டு தடுப்பணைகளின் கட்டு மானப் பணிகள் தற்போது 95 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்ததால், செங்கல்பட்டு அடுத்து பாலாற்றில் நீரோட்டம் ஏற்பட்டது. இதனால், கடந்த மூன்று நாட்களாக வல்லிபுரம் தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில், வாயலூர் அருகே பாலாற்றின் முகத்துவாரப் பகுதியில் அமைக்கப்பட்டு தடுப்புச் சுவரை தாண்டி, பாலாற்றில் உபரிநீர் வெளி யேறி கடலில் கலந்து வருகிறது. மேற்கண்ட இரண்டு தடுப்பணைக ளிலும் 5 அடி உயரத்துக்கும் மற்றும் முகத்துவாரம் பகுதியில் இருந்து ஆனூர் வரையில் உள்ள பாலாற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதால், இருகரை யோரங்களிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதாக, விவசாயி கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.                                                                                                                                                                                                                                                                                                                                சேதமடைந்த கரை சீரமைப்பு
இந்நிலையில் வள்ளிபுரம், ஈசூர் இடையே கட்டப்பட்ட தடுப்பணையின் கரைகள் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சேதமடைந்தன இதுகுறித்து தீக்கதிரில் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சேதமடைந்த கரையை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.