tamilnadu

ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புக

காஞ்சிபுரம், மே 9- ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பரணி தலைமை தாங்கினார். செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாநில தணிக்கையாளர் சார்லஸ் சசிக்குமார் சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் உடனடியாக பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும், நேர்காணல் முடிக்கப்பட்ட 44 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், ஊரக வளர்ச்சித் துறையில் ஒரே இடத்தில்மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அலுவலக ஊழியர்களை வேறு வட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும், ஊரக வளர்ச்சித் துறையில் வெகுதூரம் சென்று பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மேற்பார்வையாளர்களுக்கு அருகாமையில் உள்ள அலுவலகத்திற்கு பணிமாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

;