tamilnadu

img

புதிய கல்வி கொள்கையை திரும்பப் பெறக் கோரி பிரச்சாரம்

செங்கல்பட்டு, செப்.26- தேசிய வரைவு கல்விக் கொள்கை 2019ஐ திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்று வரும் மண்டல அளவிலான பிரச்சாரப் பயணத்திற்குச் செங்கல்பட்டில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தேசிய வரைவு கல்விக் கொள்கை 2019-க்கு எதிராகவும்,அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்திட வலியுறுத்தியும், மூடியப் பள்ளிகளை மீண்டும் திறக்கக் கோரியும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்  மண்டல அளவில் வேன் பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அனுக்குமார் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் துவங்கிய பிரச்சாரம் வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் வழியாக சோத்துப்பாக்கத்தில் முடித்துக்கொண்டனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் எதிரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மோசஸ், மாநிலச் செயலாளர் பிரசன்னா, மாவட்டத் தலைவர் இ.சார்லஸ், மாவட்டப் பொருளாளர் எ.வரதன் உள்ளிட்ட பலர் பேசினர். உற்சாக வரவேற்பு கொடுத்த இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழ்பாரதி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மபா.நந்தன், மாவட்டச் செயலாளர் க.புருஷோத்தமன், மாவட்ட துணைத் தலைவர் பரணி வர்மன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.