கள்ளக்குறிச்சி. பிப். 2- வாகன சோதனை என்ற பெயரில் அப்பாவி வாலிபர்கள் இரண்டு பேரை தாக்கி சித்திரவதை செய்த கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் விஜயகுமார், உதவி ஆய்வாளர் ஏழுமலை உள்ளிட்ட காவல் துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி வட்டம் புதுஉச்சிமேடு கிராமத்தில் வசிக்கும் தலித் இளைஞர்கள் ஜோதிபாசு, அவரது தம்பி கண்ணதாசன். இவர்கள் கடந்த 16ஆம் தேதி மோட்டர் பைக்கில் கொ.பட்டி முனியப்பன் கோயில் அருகே சென்று கொண்டிருக்கும் போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஏழுமலை மற்றும் காவலர்கள் இவர்கள் பைக்கை மடக்கி நிறுத்தியுள்ளனர். வாகனம் சற்றுத் தள்ளி நின்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த எஸ்.ஐ ஏழுமலை கண்ணதாசனை தாக்கியுள்ளார். உடன் வந்த ஜோதிபாசு ஏன் அடிக்கிறீங்க என்று கேட்டதற்கு இருவரையும் கேவலமாக திட்டி அங்கிருந்து அனுப்பி விட்டனர். ஜனவரி 17ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் ஆய்வாளர் விஜயகுமார், உதவி ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் ஜோதிபாசு வீட்டிற்கு சென்று இருவரையும் அடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஏன் எங்களது மகனை அழைத்துச் செல்கிறீர்கள் எனக் கேட்ட பெற்றோர்களை காவல் துறையினர் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் இருவரின் காதுகளில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. காவல் துறையினர் அவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாமல், விக்கிரவாண்டி மேஜிஸ்ட்ரேட் இடம் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் 19ஆம் தேதி சிறை கண்காணிப்பாளர் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அதிகார போதையில் அப்பாவி தலித் இளைஞர்களை கடுமையாக சித்திரவதை செய்து உள்ள கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் விஜயகுமார், வரஞ்சரம் காவல் உதவி ஆய்வாளர் ஏழுமலை, காவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஜோதிபாசு காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை விடுத்துள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சியில் காவல் ஆய்வாளராக விஜயகுமார் பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு இதேபோல் வாகன சோதனையின் போது, வாகனம் ஓட்டி வந்த இளைஞரை தாக்கியதில், வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த அவரது தாயார் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் நடைபெற்றது. மேலும் சாலையோரங்களில் பழம், பூ உள்ளிட்ட பொருட்களை விற்கும் சிறுவியாபாரிகள் கூடைகளை எட்டி உதைப்பது, வியாபாரம் செய்யும் பெண்களை ஆபாசமாக பேசுவது என அதிகார போதையில் வன்முறை வெறியாட்டம் நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போலவே கள்ளக்குறிச்சியில் நடைபெற்றதையும் அதிகார வர்க்கத்தின் துணையோடு இவர் மூடி மறைத்த சம்பவமும் நடைபெற்றுள்ளது. காவல் ஆய்வாளர் விஜயகுமார், வரஞ்சரம் உதவி ஆய்வாளர் ஏழுமலை உள்ளிட்டோர் மீது உரிய சட்ட பிரிவுகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் வருகின்ற 7ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.